Jan 25, 2007

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.'

மனிதக் குரங்குகள் குரங்கு மனிதர்களாய் வாழ்ந்த காலமது.

மலைஅடிவாரத்தில், குகைகளுக்குள், மிருகத்தோலாடைகளுடன் வாழ்ந்துவந்தனர் அவர்கள். சைகையும் ஒலிகளும் நிறைந்த மொழி ஒன்றைப் பேசினர். இயற்கைக்கு அஞ்சி நடுங்கினர். குழுவாக வேட்டையாடி கிடைப்பதை ஒன்றாய் பகிர்ந்தனர்.

வயதானப் பெண் ஒருத்தி ஒருநாள் இந்தக் கூட்டத்தைவிட்டுப் பிரிந்தாள். நெடுந்தூரம் நடந்தாள். மலையின் உச்சியை அடைந்து இயற்கையை கவனிக்கத் துவங்கினாள்.
வானின் நட்சத்திரங்களைக் கணக்கெடுத்தாள். பூமியின் சுழற்சியை கண்டுகொண்டாள். செடிகொடி வளர்ப்பதை தெரிந்துகொண்டாள். தீயை உருவாக்கி கட்டுக்குள் வைத்திருக்கப் பழகினாள். கோள்களின் பாதையைப் புரிந்துகொண்டாள். காட்டில் விளைபவைகளில் விஷத்தையும் உணவையும் பிரித்தறியும் அபூர்வ உணர்வு அவளுக்கிருந்தது. பல ஆண்டுகள் கழித்து இயற்கைபற்றிய பயம் நீங்கியவளாய் மலையிலிருந்து கீழிறங்கினாள்.

தொலைந்துபோனவள் திரும்ப வருவதை வேடிக்கையாய் பார்த்தனர் கீழிருந்தவர்கள். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் முகம் ஒளியில் மிதப்பதைப் போலொரு பிரம்மை மேற்கொண்டது.

மக்களைப் பார்த்ததும் கைகால்களை அசைத்து ஒருவகை நாட்டியமாடினாள் இவள். இதுவரை அவர்கள் அறிந்திராதது அந்த நாட்டியம்.

"உண்மைகளை அறிந்துகொண்டேன்" என்றாள்.

"சொல்" என்றனர், சிலர் ஏளனத்துடனே.

"சொல்லொண்ணா பேரின்பம்." என்றாள்.

"பைத்தியக்காரி." என்றனர்.

"ஆமாம். அசாதாரணச் சிந்தனை கொண்டவர்கள் பைத்தியங்கள்தான்." என்றாள்.

"அவளை விடுங்கள்." பெரியவர் ஒருவர் முன்வந்தார்."உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. சொல் அதை எங்களுக்கும்."

"இயற்கை." என்றாள்

"விளக்கு." என்றார்.

அவளுக்குப் புரிந்ததைச் சொன்னாள். புரியாமல் விழித்தனர் மக்கள்.

"புரியச்செய்". என்றனர்.

கதைகளாகச் சொன்னாள் அவள் கண்டவைகளை.

"எப்படி நம்புவோம் உன்னை?" என்றனர்.

"நாளை பகலில் இரவு தோன்றும் பாருங்கள்." என்றாள்.

கேலி செய்தனர் அவளை. கல்லால் எறிந்து கொல்வோம் என்றனர். நாளைவரை பொறுத்திருக்கச் சொன்னார் பெரியவர்.

அந்த சூரியக் கிரகண நாளுக்குப்பின் உலகின் முதல் மதம் தோன்றியது.

Jan 13, 2007

வலைப்பூக்களால் திருக்குறளுக்கு ஒரு தமிழ் மாலை



தமிழுக்காகவே பிறந்த இந்த வலைப்பூவில், இன்னுமொரு மைல்கல் நடவிருக்கிறோம். அது திருக்குறளுக்கான விளக்கம்.


சாமான்ய மனிதர்களால், சாமான்ய எழுத்துக்களால் குட்டிக்குட்டி கதைகள் மூலம் ஒவ்வொரு திருக்குறளுக்கும், மக்கள் ரசிக்கும்படியாக தருவதே எங்கள் நோக்கம். தமிழ்ச்சங்கம் மூலம் பொங்கல் திருநாளிலிருந்து திருக்குறள் உலகை வலம் வர இருக்கிறது. எங்கள் முயற்சிக்கு உங்கள் ஆதரவை பெரும் அளவில் தருமாறு (வேறு எப்படி பின்னூட்டங்கள் மூலம் தான்) கேட்டுக்கொள்கிறோம்.

Dec 19, 2006

அவ்வையும் அப்துலும்

கோவை வந்து உலகத்தமிழ் இலக்கியக் கருத்தரங்கை துவக்கிவைத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது உரையில் ஔவையின் கீழ்கண்ட பாடலை மேற்கோளிட்டிருக்கிறார்.

அரிது அரிது மனிடராதல் அரிது
அதனினும் அரிது, கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்தாலும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும்தான் செய்த காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே!

மேலும் பாரதியின் அறிவியல், மெய்யியல் பாடல் வரிகள் கீழ்கண்டவாறு.

இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?

மேலும் அவர், "தமிழ் ஒரு பிரதேச மொழி மட்டுமில்லை; மனித சமுதாயத்தை சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம்" என்றிருக்கிறார்.

நன்றி: தினமலர்

Nov 28, 2006

கலைவாணரே உமைத்தானே

வாணரே கலைவாணரே
திரையுலகில்
உம்மையன்றி பலர் வீணரே
அவர்கள்
நகைச்சுவை என வருகையில்
வெறும் உடற் கோணரே


உன் கருத்து
உன் பட்டம்
உன் நடிப்பு
திருடித்தான் பலருக்குப் பிழைப்பு
அதனால் வியப்பதும் நிலைப்பதும்
உனது அன்றைய உழைப்பு


காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வெற்றித் திருமகன் நீ
இது உனக்குத்தான் பொருத்தம்
வேறு யாருக்குச் சொன்னாலும்
ஏங்கேயோ உறுத்தும்


கிந்தனாரும் நல்லதம்பியும்
உலகத்திலே பயங்கரமான ஆயுதமும்
கண்ணே உன்னால் நானடையும் கவலையும்
மறவாத வகையறாவாக
பாட வேண்டும் தொகையறா


நவம்பர் 30ல் நீ பிறந்தாய்
ஐம்பதாம் ஆண்டில் மறைந்தாய்
ஆனாலும் தமிழர் மனிதில்
குறையாது நிறைந்தாய்
சமூகக் கருத்தும் நகைச்சுவையும்
ஒன்றாக்கி அதிலே உறைந்தாய்!


உனது புகழ்
இன்னும் வளரத் தேவையில்லை
செடிதானே மரமாக வேண்டும்
நீ மரம்!
நீட்டோலை வாசியா நின்ற நல்ல மரமல்ல
மலர்ந்து கனியும் காட்டகத்து மரம்!


அன்புடன்,
கோ.இராகவன்

Nov 9, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்-முடிவுகள்


இந்தத் தலைப்புக்கு வந்த கவிதைகள் பல. அதில் சிலர் பதிவுகள்(பிலாகர்) அல்லாதவர்கள். அவை கொடுத்த உற்சாகம் தான் எங்களுக்கு பெரிய ஊட்டமே. இருப்பினும் முடிவுகள் அறிவிக்க காலதாமதம் ஆனதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று கணினிமயமாக்கல் இல்லாததுதான்.
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பளித்த அனைவருக்கு நன்றி! நன்றி! நன்றி!
இப்படி ஒரு போட்டியை நடத்த எங்களுக்கு அறிவுரை வழங்கிய தடாலடியாருக்கும், ஊக்கமும் முடிவுகளில் உதவிய தேனி கண்ணனுக்கும் நன்றி!
முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலபாரதிக்கும்(ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு விமர்சனம் தந்தவருக்கு சங்கம் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது. நாளை அந்த விமர்சனங்களை ஒரு பதிவாகவே வெளியிடுகிறோம்), முத்துக்கள் மாதிரி ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு மதிப்பெண் அளித்து தரம் பிரித்து தந்த "நிலவு நண்பன்" ரசிகவ் ஞானி, அவர்களுக்கும் நன்றி! நன்றி!



தாமாகவே முன் வந்து எங்களுக்கு உதவிய முத்தமிழாருக்கும்(மஞ்சூர் ராஜா) ராசுக்குட்டிக்கும் எங்கள் நன்றிகள் பல.


வெற்றியாளர்களின் பெயர்களை வெளியிட சங்கம் தனி மடலை எதிர்பார்ர்க்கிறது- தனி மடல் முகவரி sirippu.sangam@gmail.com

இதோ முடிவுகள்


ஆறுதல்: கவிதை- 21
கவிதையைப் படிக்க சொடுக்கவும்


மூன்றாவது இடம்: கவிதை - 23
கவிதையைப் படிக்க சொடுக்கவும்


இரண்டாவது இடம்: கவிதை - 05
கவிதையைப் படிக்க சொடுக்கவும்


முதல் இடம்: கவிதை - 03
கவிதையைப் படிக்க சொடுக்கவும்

Oct 27, 2006

புதுசு கண்ணா புதுசு!

காக்க வைத்தலும்,
காத்து இருப்பதும் சுகம்தான்.

புரிந்துகொள்பவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.

Oct 17, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்-விமர்சனம்(30-34)

கவிதை-34 படிக்க

//இன்னும் இன்னும் வல்லது வாழ்வதற்காய்புத்தம் புது புனர்ஜென்மமேகஇன்னும் இருக்கிறது ஆகாயம்//

ஆரம்பத்தில் மழை, சூறாவளி,சுனாமி என்று நீரைச் சுற்றியே போகும் கவிதை, மெல்ல மற்ற இயற்கை, செயற்கை அபாயங்களையும் தொட்டு, வல்லவன் வாழ்வான் என்னும் சித்தாந்தத்தைச் சொல்ல முயல்கிறது. வழக்கமான சொற்களாலும் வசனங்கள் போன்ற நடையாலும் கவிதையின் பாணியில் நச் தன்மை குறைகிறது. வல்லது வாழ்வது நல்லதா, அல்லதா என்று எதை நிறுவ முயல்கிறார் கவிஞர் என்று புரியாமலும் போகிறது..

நன்றி-விமர்சனம்-பாலபாரதி


கவிதை 33 படிக்க

//முன்பும் இருந்தது ஆகாயம்இன்னும் இருக்கிறது ஆகாயம்இனியும் இருக்கும் ஆகாயம் //

மூன்றே வரிகளில் நல்ல கவிதை..

இனியும் இருக்கும் ஆகாயம் என்னும் நம்பிக்கை கவிதை.

நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை-32 படிக்க

//அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்" //

தாய்-மகள் உறவைப் பற்றிய அருமையான கவிதை..மகளே உலகமாய் வாழும் தாய்..தாயே உலகமாய் நினைக்கும் மகள்..இன்னும் இருக்கிறது வானம் என்கிறாள் தாய்..உலகத்தை மகளுக்கு உணர்த்தி..

நன்றி-விமர்சனம்-பாலபாரதி


கவிதை-31 படிக்க// மனம் கவர்ந்த மங்கையரைக் கண்ட மனிதனின் காதலை விவரிக்க வார்த்தையேது பலவாயிரம் உயிர் அணுக்களுடன் ஓட்டப் பந்தயத்தில் வென்றது அவளைக் காணவே //

காதலை இன்னுமொரு விதமாகச் சொல்கிறது இந்தக் கவிதை..முதல் காதல் அழியாதது..மனதை விட்டு விலகாதது..தோல்வியடைந்த முதல் காதலைப் பற்றிய நினைவுகள்..

நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை-30 படிக்க// இன்னும் இருக்கிறது ஆகாயம் அவர்தம் வீட்டுக் கூரையாக //

நச் கவிதை.. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டியான ஆகாயத்தை வீடிழந்து துன்பப் படும் நபர்களின் வாழ்க்கையுடன் ஒட்டிக் காட்டுகிறார் கவிஞர்

நன்றி-விமர்சனம்-பாலபாரதிஇதோ இந்தக் கவிதையில் பிச்சைக்காரி - வறியவர்கள் - நம்பிக்கை இழந்து பயணப்படுவோர்க்கெல்லாம் ஒரே ஆறுதலாக ஆகாயம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது என்று எழுதியிருக்கின்றார் கவிஞர். இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற வரியோடு முடித்திருக்கலாம் ஆனால் அவர்தம் வீட்டுக் கூரையாக என்று நீட்டியிருக்கவேண்டாம். கவிஞர் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளையும் கருத்துக்களையும் மெருகேற்றியிருக்கலாம்.

நன்றி-விமர்சனம்-நிலவு நண்பன்