காட்சி : 1 இடம் : காலேஜ் லைப்ரரி
ஜன்னலோர இருக்கையில் முழுநிலவு! உட்கார்ந்திருக்கிறாள் அவள். எதையோ ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கிறாள். வியர்க்க விறுவிறுக்க லைப்ரரிக்கும் நுழையும் தோழி, அவளை நோக்கி ஓடி வருகிறாள்!
“போச்சு.. எல்லாமே போச்சுடி!”
“ஏய் லூசு. என்னாச்சுடி உனக்கு? என்ன உளர்றே?”
“யாரு நானா லூசு! அவனை நம்பி மோசம் போனியே, நீதான் லூசுப்பொண்ணு. உன்னோட ஆசைக்காதலன் இருக்கானே அவன் உனக்கு மட்டும் காதலன் இல்லே. இன்னொருத்தியையும் லவ் பண்றான்டி”
“என்ன சொல்றே?”
“அவன் உன்ன நல்லா ஏமாத்திட்டு இருக்கான்னு சொல்றேன்”
கோபத்தில் நிலாப்பெண்ணின் முகம் ரத்தச் சிவப்பாகிறது!
“எவ அவ?”
“தெரியல, ஈவினிங் காலேஜ் பொண்ணுன்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் நெருக்கமா நின்னு பேசிக்கிட்டிருந்தத நானே என் கண்ணால பார்த்தேன்”
“எங்கே?”
“ரவுண்டானாவுக்குப் பக்கத்தில் இருக்க பார்க்ல. பேச்சென்ன பேச்சு.. கொஞ்சாத குறைதான். கருமம். இப்டியா பட்டப்பகல்ல ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல ஒட்டிக்கிட்டும் கட்டிக்கிட்டும் இருப்பாங்க!”
குபுகுபு கோபத்துடன், கூடவே வழியும் கண்ணீருடனும் எழுகிறாள் நிலா..
“எப்பப் பார்த்தே நீ?”
“ஜஸ்ட் நௌ.. இப்பத்தான். மறுபடியும் ஈவினிங் மீட் பண்ணலாம்னு சொல்லிக்கிட்டே பிரிஞ்சு போனாங்க. இன்னிக்கு ஈவினிங்கே நீ அங்கே போனாலும் அந்தக் கூத்தைப் பார்க்கலாம்”
ஆத்திரமும் அழுகையும் ஏமாற்றமுமாக இருகும் நிலாப்பெண்ணின் முகம் க்ளோசப்பில் கொதிக்கிறது.
காட்சி : 2 இடம் : காலெஜுக்கு எதிரே இருக்கும் இண்டர்நெட் ப்ரௌசிங் சென்டர்
மும்முரமாக வலையில் மூழ்கிப் போயிருந்தான் அவன், நிலாப் பெண்ணின் காதலன். வியர்க்க விறுவிறுக்க லைப்ரரிக்கும் நுழையும் (அதே)தோழி, அவனை நோக்கி ஓடி வருகிறாள்!
“போச்சு.. எல்லாமே போச்சுடி!”
“ஏய் லூசு. என்னாச்சு உனக்கு? என்ன உளர்றே?”
“யாரு நானா லூசு! அவளை நம்பி மோசம் போனியே, நீதான் லூசுப்பையன். உன்னோட ஆசைக்காதலி இருக்கானே அவன உனக்கு மட்டும் காதலி இல்லே. இன்னொருத்தனையும் லவ் பண்றா”
“நிறுத்து. பொண்ணா இருக்கதால அறையாமப் பேசுறேன். இல்லேன்னா இந்நேரம் வகுந்திருப்பேன்”
“அவ உன்ன நல்லா ஏமாத்திட்டு இருக்கான்னு சொல்றேன். நீ என்னடான்னா என்னை அடிப்பேன்னு சொல்றே!”
கோபத்தில் அவன் முகம் ரத்தச் சிவப்பாகிறது!
“அவளைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி உன் மேல நான் வச்சிருக்க இமேஜைக் கெடுத்துக்காதே. ஓடிப்போ”
“ப்ரண்டாச்சே, பாவம்னு பார்த்த்தைச் சொல்லி ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன் பாரு. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். எவனோ ஈவினிங் காலேஜ் பையன்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் ரவுண்டானாவுக்குப் பக்கத்தில் இருக்க பார்க்ல நெருக்கமா நின்னு பேசிக்கிட்டிருந்தத நானே என் கண்ணால பார்த்தேன்”
“வாயைக்கழுவு முதல்ல. நீயும் நானும் கூடத்தான் இப்ப நெருக்கமா உட்கார்ந்து பெசிக்கிட்டு இருக்கோம். அதுக்காக நாம லவ்வர்ஸ்னு சொல்லிடறதா?!”
“பேச்சென்ன பேச்சு.. கொஞ்சாத குறைதான் அங்கே அவங்க ரெண்டு பேரும். கருமம். இப்டியா பட்டப்பகல்ல ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல ஒட்டிக்கிட்டும் கட்டிக்கிட்டும் இருப்பாங்க!”
சொல்லியபோதே தன் தோளை அனிச்சையாக உரசிய அவளை கோபப்பார்வையால் எரிக்கிறான் அவன்.
“நீயும் நானும்கூட இப்ப உரசிக்கிட்டுதான் உட்கார்ந்திருக்கோம், தெரியும்ல!”
சட்டென விலகுகிறாள் அவள்.
“இங்க பார். என்னை நான் எவ்வளவு நம்புறேனோ அவ்வளவுக்கு என் காதலியையும் அவ காதலையும் நம்புறேன். அவ உதட்டால என் பேரைச் சொல்லி கூப்பிடுறப்ப, உயிரால கூப்பிடுறதாத்தான் உணர்றேன். மரியாதையா நீ இப்பவே இந்த இடத்தைவிட்டுப் போயிடு. இல்லே.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!”
ஆத்திரமும் அழுகையும் ஏமாற்றமுமாக இருகும் தோழிப்பெண்ணின் முகம் க்ளோசப்பில் கொதிக்கிறது!
காட்சி : 3 இடம் : ரவுண்டானாவுக்கு அருகே இருக்கும் அந்தப் பூங்கா
காதலர்கள் இருவரும் ஒருவர் கையை இன்னொருவர் இருகப்பற்றி இருக்க, நெகிழ்ந்த கண்களுடன் தோழிப்பெண் நிற்கிறாள். பேசுகிறாள்..
“மன்னிச்சுக்கங்க! நான் செஞ்சது தப்புதான், தெரிஞ்சே செஞ்ச தப்புதான்! உங்க ரெண்டு பேரோட காதலையும் சும்மா டெஸ்ட் பண்ணிப்பார்க்க முடிவெடுத்தேன். இல்லாததையும் பொல்லாததையும் கதை கட்டிவிட்டு, இப்ப உங்ககிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன். அதுவும் ஒருவகையில் நல்லதுக்குத்தான். இப்ப நான் ஒரு உண்மையை உணர்ந்திருக்கேன்”
பேசியபடியே நிலாப் பெண்ணின் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்கும் தோழி பஞ்ச் டயலாக் பேசுகிறாள்..
“சத்தியமா சொல்வேன் இப்ப. நீ அவன் மேல வச்சிருக்க காதலைவிட அவன் உன்மேல வச்சிருக்க காதல் ரொம்ப பெருசு. உண்மையில நீ கொடுத்துவச்சவ!”
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொருட்பால், அதிகாரம்: 43. அறிவுடைமை, குறள்: 423
யார் சொல்ல எதைச் கேட்டாலும் அந்த விஷயத்தில் உண்மை என்னவாக இருக்கும் என உணர்வதே அறிவாகும்.
நன்றி: கெளதம்
Jan 24, 2008
அறிவுடைமை, குறள்: 423
செதுக்கியவர் ILA (a) இளா at Thursday, January 24, 2008 2 ஊக்கங்கள்
Labels: அறிவுடைமை
Subscribe to:
Posts (Atom)