Jul 6, 2007

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் உறுதி மொழி பாரீர்

  • புலம்பெயர்ந்தாலும் தடம் புரளாமல் தவறாது தமிழ் மொழி இனம் பண்பாடு காத்திடலின் அவசியத்தை சிகாகோ பெருநகரிலும் நிலைநாட்டல் வேண்டி ஆவன செய்யும்

  • இன்றமைந்தது இன்றே தீர்ந்தது வென நில்லாது நாளை என்ற சமுதாயம் தமிழ்ச்சமுதாயம் தமிழோடு வாழ வழிவகுக்கும் வகை காண ஆவன செய்யும்

  • அறிவுசார்புடைய வளமான விழிப்பான வழிகாட்டியென உலகெலாம் வாழ் தமிழினம் வாழ்ந்திட இடுக்கண் களைந்து தமிழுறவு வளர்ந்திட ஆவன செய்யும்

நன்றி-சிகாகோ தமிழ்ச் சங்கம்

Jul 2, 2007

தமிழிசை

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழை பகுப்படுத்தி, இசை தமிழர் வாழ்வியியலில் ஒரு முக்கிய அம்சமாக தொன்றுதொட்டு இருந்துவருகின்றது. தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாக செம்மை பெற்றது.
தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் காணலாம். சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி அதிகமாக, விரிவாக கூறப்பட்டுள்ளது.

தமிழர், இசையிலும், இயலிலும், நாடகயியலிலும் மேம்பட்டு விளங்கி வந்தனர். ஆனால் பல ஆண்டுகள் பிற மொழி பேசும் அன்னியர் ஆட்சியில் வாழ்ந்ததால் தமிழும், தமிழிசையும் உருமாற்றத்திற்கு ஆளாயின.
வடமொழியான சமஸ்கிருதச் சொற்களின் திணிப்பு பெருகியது. இயல்தமிழ்ச்சுவடிகள் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் பலி கொள்ளப்பட்டன. சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளசமுத்திரம், ஆளத்தி அமைப்பு போன்ற எத்தனையோ இசைநூல்களும், கூத்துவரி, உளநூல், சயந்தம், செயிற்றியம் விளக்கத்தார் கூத்து, நாட்டியவிளக்கம் ஆகிய நாடக நூல்களும் அழிந்து போயின. அக்கால நாடகவியல் நூல்கள் பெரும்பாலும் தமிழிசைச் செவ்விகளை முதன்மையாகக் கொண்டவை.

தமிழர் வாழ்வில் பாட்டு

"தமிழர்கள் வாழ்க்கையில் தாயின் வயிற்றில் கருக்கொண்டதுமே நலுங்குப் பாடல், மண்ணில் உதித்ததுமே குழந்தைக்குத் தாலாட்டுப்பாடல், சிறுவர்களுக்குத் நிலாப்பாடல், (பாரதியின் பாப்பா பாடல்), இளைய வயதில் வீரப்பாடல் மற்றும் காதல் பாடல், திருமணத்தில் திருமணப்பாட்டு, உயிர் துறந்தபின் ஒப்பாரிப்பாட்டு என மனித வாழ்க்கையின் அனைத்துப் பருவங்களிலும் தமிழ்ப்பாடல்கள் உள்ளன."

தமிழிசை வாணர்கள்

  • அருணகிரிநாதர்
  • முத்துத் தாண்டவர்
  • மாரிமுத்தாப்பிள்ளை
  • அருணாச்சல கவிராயர்
  • ஊத்துக்காட்டு வேங்கட சுப்பையர்
  • கோபால கிருஷ்ண பாரதியார்
  • இராமசாமி சிவன்
  • இராமலிங்க அடிகளார்
  • கவிகுஞ்சாபாரதி
  • வேதநாயகம் பிள்ளை
  • திரிகூடராசப்ப கவிராயர்
  • மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
  • பாரதி பாரதிதாசன்
  • மாரியப்ப சுவாமிகள்
  • சிதம்பரம் ஜெயராமன்
  • திருவாரூர் நமச்சிவாயம்
  • தண்டபாணி தேசிகர்
  • கே.பி. சுந்தராம்பாள்
  • தியாகராஜ பாகவதர்.

நன்றி: விக்கிபீடியா

Apr 23, 2007

ரகசிய சிநேகிதியே!(குறள்கதை.நட்பு)

பத்துவருடங்களுக்குப் பிறகு நேரிடப்போகிற சந்திப்பு! நினைக்கும்போதே நாவில் இனிப்பைத்தடவிய மாதிரி நினைவில் தித்தித்தது ஆனந்தனுக்கு.

குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாய் துபாய்க்கு பணி செய்ய ஆனந்தன் புறப்படும் முன்பு கடைசியாய் சந்தித்தது.

நீண்ட நேரம் பேசிமுடித்துப் பிறகு பிரியும்போது விளையாட்டாகப் பேசிக்கொண்டதுதான.

"சரியாக பத்துவருஷம்கழித்து இதே போல தமிழ் புத்தாண்டுதினத்தில் ,இதே மாலைநேரத்தில், இதேபெங்களூர் லால்பாக்பூங்காவின் கண்ணாடிமாளிகையில் உலகின் எந்தமூலையில் இருந்தாலும் நாம் சந்தித்துக்கொள்ளணும் ...பத்துவருஷங்கிறது பெரிய இடைவெளிதான்..வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை
உண்டாக்கி இருக்கும் , ஆனாலும் பழகிய நாட்களில் பேசியபடி பிறகு அதை நாம் செயலில்கொண்டுவரமுடிஞ்சிதான்னு மனம்விட்டு பேசிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம்.இடையில் நாம் சந்தித்தாலும் அல்லது மறந்தாலும் பத்துவருடம் கழித்து கண்டிப்பாகப் பார்த்துக்
கொள்ளணும் ஆனந்த்!"என்று அந்த இளம் வயதுக்கே உரிய வேகத்தில் காயத்ரி சொல்லி இருக்கலாம் .

ஏனெனில் அதற்குப் பிறகு அவளை ஆனந்தன் சந்திக்கவே இல்லை ஆனாலும் காயத்ரியின் அந்த வார்தைகள் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

கண்ணுக்குத் தெரியாத காற்று சுவாசத்தை இயக்குவது போல கண்காணாது எங்கோ இருக்கும் நட்பின் நினைவுத்தாக்கம் பல நேரங்களில் மனவலிமைக்கு உதவுவதை ஆனந்தன் உணர்ந்திருக்கிறான்.


காயத்ரியின் கல்யாணப்பத்திரிகை எட்டுவருடம்முன்பே ஆனந்தனின் வீட்டு முகவரிக்கு வந்தது.

இருபத்திமூன்றுவயதில் பெண்கல்யாணம் என்பதெல்லாம் எட்டுவருடம்முன்பு சகஜம்தான்.சரியாய் அதே நாளில் ஆனந்தனின் அப்பாவிற்கு மாரடைப்புவந்து மரணமடையவும், அவனால் அவளுடைய கல்யாணத்திற்குப் போகமுடியவில்லை.

ஆனந்தன், அப்பாவின் மறைவிற்குப் பிறகு வீட்டில் அம்மாவும் இரண்டுதங்கைகளுக்கும் பாதுகாப்பாய் இந்தியாவிலேயே ஒருவேலைதேடிக்கொண்டான். படிப்புக்கேற்ற வேலையுமில்லை வாங்கிய சம்பளமும் குடும்பத்தை கரைசேர்க்க போதவில்லை.

இதில் மூத்த தங்கைவித்யா திருமணத்திற்குத் தயாராய் நிற்க, கடனைவாங்கி அதைமுடித்தான் .

அடுத்து திவ்யா பத்தொன்பதுவயதிலேயே காதல்வலையில் விழுந்து விட்டாள்.

அம்மாதான் திட்டினாள்,"உனக்கென்னடி அவசரம்? உன் அண்ணன் ஒருத்தன் குடும்பத்தை தாங்கிட்டு இருக்கானேன்னு நினைச்சிப்பாத்தியா?அவன் என்னிக்கோ ஒருபொண்ணை இழுத்துட்டு வந்திருக்கலாம்...குடும்ப சுமையை ஏத்துகிட்டு துறவிமாதிரி இருக்கான் என் மகன் பாவம்.."

அம்மா புலம்பினபோது ஆனந்தன் "தங்கச்சியை ஒண்ணும் சொல்லாதீங்கம்மா, பாவம் அது குழந்தை!" என்பான் .

அவன் குணம் அப்படி. யாரையும் வெறுக்கத்தெரியாது, யாரிடமும் கடிந்துபேசவராது. இந்தகுணம்தானே அவனுக்கு ஒரு இனிய சினேகிதியை பத்துவயதிலேயே பள்ளியில் தேடிகொடுத்தது?

அவ்வப்போது ஆனந்தனின் நினைவில் மின்னலென வந்துபோவாள் காயத்ரி. கடந்து செல்லும் பூக்காரியின் கூடையினின்றும் மிதந்து வரும் பூவாசனையைப் போல சுகமான நினைவுகள்! பள்ளியிலிருந்து கல்லூரிவரை கூடவே வந்த இனிய தோழி.

.காயத்ரியின் கடிதம் முகவரி அடங்கிய கல்யாணப்பத்திரிகை, கடிதம் எல்லாம் அவனுடைய அப்பா இறந்துபோன அமளியில் தொலைந்துபோய்விட்டது.குறும்புச் சிரிப்புடன் அந்த முகம்மட்டுமே நினைவில் இருக்க கடிதத்தில் அவள் தொடர்பு கொள்ளச் சொல்லி எழுதி இருந்த முகவரி, காணாமலேயே போய்விட்டது.


இண்டர்நெட் ஈமெயில் செல்போன் என்றெல்லாம் வந்துவிட்ட இந்தகாலத்திலும் அவனால் காயத்ரியை நினைத்தபொழுதில் ஆத்மார்த்தமாய் பேசிக்கொள்ள இயலவில்லை. ,அதற்கு அதிகப்பிரயத்தனமும் ஆனந்தன் எடுக்கவில்லை.மனதிற்குள் நட்பு மகிழ்ச்சியான நினைவுகளை மயிலிறகாய் தடவிக்கொண்டேதான் இருந்தது.

நடக்கவேண்டுமெனில் எதுவும் நடக்குமென நினைத்துக்கொண்டிருந்தான்.வாழ்வில் நடந்து போனதை எப்படி நாம் இனி ஒன்றும் மாற்ற முடியாதோ அப்படியே எதிர்காலத்தையும் நம்மால் கட்டளையிடமுடியாது என்பதையும் உணர்ந்திருந்தான்.

எதிர்காலம் என்பது கணக்குக்கு வராத விஷயம். நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தவினாடிதான் நமக்கு சொந்தம் எனவே நிற்கின்ற செயல்தான் நம்முடையது அந்தச் செயலை செய்வதற்கு பழையநினைவுகள் அனுபவ ஆற்றலாயிருக்கிறது..இன்னதுதான் நடக்கும் என்றோ இன்னதுதான் நடக்காது என்றோ எதுவுமே நிச்சயமல்ல,எனினும் உலகம் உருண்டை; புறப்பட்ட இடத்திற்கு வந்துதான் ஆகவேண்டும்,ஆகவே காயத்ரியை நான் என்றாவது, சந்திக்கக்கூடும்' என ஆனந்தன் மனதை சமாதனப்படுத்திக்கொள்வான்.

அதன் முயற்சியாக இந்த சந்திப்புக்குத் தயாரானான்..

பத்துவருடங்கள் என்பது வாழ்க்கையை சற்றே புரட்டிப்போடும் காலம். ஏராள மாற்றங்கள் ஆனந்தனுக்கும் ஏற்பட்டது .அவனது தங்கை
திவ்யா காதலித்தவனையே மணக்க விரும்பவும், அப்போது அந்தப் பையனின் அப்பா, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

தனது மகளை ஆனந்தனுக்கு மணமுடிக்க சம்மதமானால் திவ்யாவின் காதலை நிறைவேற்றிவைப்பதாக சொன்னார். கல்யாண செலவு அத்தனையும் தானே ஏற்றுக்கொள்வதாயும் , ஆனந்தனின் அப்பா வாங்கிய கடனையெல்லாம் அடைப்பதாயும் ஆசை காட்டினார்.

ஆனந்தனின் அம்மாவிற்கு மாதவியைப் பார்க்கும்போதே பிடிக்கவில்லை. "வேண்டாம்டா ஆனந்தா..உன் வாழ்க்கையை பணயம் வச்சி உன் தங்கையை நீ வாழவைக்க வேணாம்..அந்தமனுஷர் பேச்சிலேயே ஆணவம் தெறிக்குது அப்பாமாதிரிதான் தப்பாம பொண்ணும் நடந்து
கொள்ளும். உன் மென்மையான குணத்துக்கு அவ பொருத்தமில்லைப்பா..மேலும் மாதவி அழகிலும் உனக்கு பொருத்தமில்லயேப்பா?" என்று சொல்லி புலம்பினாள்

ஆனந்தன் அம்மாவை சமாதானம் செய்தான்" அம்மா! அழகு நிரந்தரமா சொல்லுங்க? காலமழை ஒருநாள் அழகுச் சாயத்தை கரைக்கத்
தான் செய்யும் ..திவ்யாவோட ஆசை நிறைவேற வேற வழியும் இல்லையே அம்மா? ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுவது வாழ்வில்
தவிர்க்கமுடியாதது என்று என் தோழி காயத்ரி அடிக்கடி சொல்வாள் அதுதான் உண்மையும்கூட ..." என்றான்.

"ஆனந்தா! 'மெய்த்திருப்பதம் மேவு' என்கிற கம்பராமாயணப்பாட்டுதான் நினைவுக்கு வருதுப்பா எனக்கு. 'நாளையிலிருந்து நீ
மன்னன் 'என்றபோதும் சரி, 'இத்திருத்துறந்துஏக' இந்த நிமிஷத்திலிருந்து காட்டுக்குப்போ என்றபோதும்சரி சக்கரவர்த்திதிருமகன் ராமனின் முகம் சித்திரத்தில் வரைந்த தாமரைப்பூ மாதிரி மலர்ந்தே இருந்ததாம்.நீயும் ராமனைபோலவே இருக்கிறாயே அப்பா?" கண்கசிந்தாள் பெற்றவள்.

எது நேர்ந்தாலும் கண்கலங்ககூடாது;உணர்ச்சிவசப்படாமல் அறிவால் எதையும் அணுகவேண்டும்

இதுவும் காயத்ரி அவனுக்கு சொல்லிக் கொடுத்ததுதான்.

வாழ்வின் எல்லா கட்டங்களிலும் அவள் அவனுக்கு மனதளவில் உறுதுணையாய் இருக்கிறாள். அவளைவிட ஒருவயதுதான் இளையவள் ஆனாலும் அறிவுமுதிர்ச்சியில் பலமடங்கு மூத்தவள்.காயத்ரியின் ஒவ்வொரு சொல்லும் அவனுக்குபிடித்தமானதுமட்டுமல்ல.அதற்கும்மேலே அவன்வாழ்வின் பிடிப்புகோலே அதுதான்.

ஆனால் ஆனந்தனின் மென்மையானமனமே அவன்மனைவிக்கு சாதகமாய்ப் போகுமென அவன் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.

மாதவி சந்தேகப்பிராணியாய் இருந்தாள்." எங்கப்பா பணத்துக்கு ஆசைப்பட்டுத்தானே அழகில்லாத என்னைக் கட்டிகிட்டிங்க? இத்தனை அழகா ராஜா மாதிரி இருக்கற நீங்க யாரையுமே லவ் பண்ணலயா? கண்டிப்பா உங்கமனசுல யாரோ இருக்கிறா..நீங்க என்கிட்ட
சொல்லாம மறைக்கிறீங்க. யார் அவ? எங்கிருக்கா? அவளை பார்க்கபோவீங்களா? போன்ல எனக்குத் தெரியாம பேச்செல்லாம் உண்டா? சொல்லுங்க"உலுக்குவாள் அவன் சட்டையைப் பற்றி இழுத்து.

குழந்தைபிறந்தால் சரியாகும் என்றாள் அவன் அம்மா.

ஆயிற்று, குழந்தை பிறந்து அதற்கு மூன்றுவயதும் ஆகிறது , மாதவி மாறவே இல்லை இன்னமும் கூச்சல் ,கத்தல், சந்தேகம் ,அழுகை ,ஆர்ப்பாட்டம் .

ஹிஸ்டீரியா என்றார்கள் டாக்டர்கள். அவன் அம்மா மருமகளின் போக்கைக் காண சகிக்காதவளாய் பெண்வீட்டிற்குபோய்விட்டாள்.

மகன் அப்படியே தனது ஜாடையில் இருப்பதால் அதனை வெறுப்பதும் அதற்கு வேண்டாததை சொல்லிக்கொடுப்பதுமாய் இருக்கும் மனைவியை அனுதாபமாகவே பார்க்கிறான் ஆனந்தன். விவேகானந்தன் என்ற அந்த இந்திய இளைஞர்கள் வரலாற்றில் முத்திரை பதித்த பெயரை ஆசையாய் ஆனந்தன் தான் வைத்தான் ஆனால் 'விக்கிஇடியட்'என்றே மாதவி அழைக்கிறாள்.குழந்தையை அவள் வளர்ப்பில்
விடுவதற்கே ஆனந்தன் அஞ்சவேண்டிய சூழ்நிலை,ஆனாலும் பொறுமை காக்கின்றான்.

வாழ்க்கை எல்லாருக்கும் வரமல்லவே?

ஆனந்தன் இந்த சந்திப்புக்குபுறப்படுவதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தான். நல்ல நட்பைப்புரிந்துகொள்ளும்பக்குவம் மாதவிக்கு
கிடையாது ஆகவே சொல்லாமல் செல்வது நல்லதென தோன்றியது . நன்மைக்காக உண்மையை மறைக்க வேண்டிய நிலையில் ஆபீஸ்
விஷயமாய் ஒரு நண்பனை சந்திக்கபோவதாய் கூறினான்.மாதவி வழக்கம்போல அவனை நம்பிக்கையற்ற பார்வையில் சீறி விழுந்து அனுப்பினாள்.

லால்பாக்தோட்டம்.

பெங்களூர் நகரத்திற்கு அழகுசேர்க்கும் இயற்கைஅழகுகொண்ட அந்த தோட்டவளாகத்தில் நுழைந்து கண்ணாடிமாளிகை வாசலுக்குவந்துநின்றான்.

மாலைநேரத்திற்கே உரிய மஞ்சளும் சிவப்பும் கலந்த அந்திவான அழகும் இலேசான குளிரைக்காதோரம் விட்டுச் செல்லும்காற்றுமாய் ஆனந்தனை பரவசம் எனும் அடுத்துவரும் நாடகத்திற்கான ஒத்திகையை ஆரம்பித்தன.

கண்ணாடிமாளிகையின் வடக்குவாயிலின் இருபுறமும் இருந்த சின்ன கல்யானைகள்மீது சிறுகுழந்தைகள் ஏறுவதும் இறங்குவதுமாய் உற்சாகக்குரல் கொடுத்தன. அருகிலிலிருந்த செண்பகமரத்தில் பூத்த பூக்களின் வாசம் நாசியில் நுழைந்து தலையை கிறுகிறுக்க வைத்தது. நூறுவருடத்திற்கு மேற்பட்ட மரங்ககளைக் கொண்ட இடத்தில் நிழலின் ஆளுமை அதிகம்தெரிந்தது.ரோஜாத்தோட்டத்தை ரோஜா
தோட்டமே வேடிக்கைபார்ப்பதுபோல நிறைய இளம் பெண்கள்அங்கே சூழ்ந்திருந்தனர்.பச்சைக்கம்பளமாய் புல்வெளி.

சுற்றிலும் பார்வையைசெலுத்தியவன் கையசைத்தபடி தூரத்தில் வரும் பெண்ணை நின்ற இடத்திலிருந்தே ஆழ்ந்துபார்த்தான்,உடனேயே.கண்கள் விரிந்தன.வாய் கூவியது." காயத்ரீ!"


தோற்றத்தில் அதிகமாற்றமில்லாது அதே பூசினாற்போன்ற உடம்பில், செதுக்கிய சிற்பமாய், புன்னகை தவழ அவனை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள் காயத்ரி.

தோற்றப்பொலிவிற்கு உடற்கூறுமட்டும் காரணமல்ல ஒருவருடைய மனநிலையும் காரணமென்பதை எதிரில் வந்த காயத்ரி நிரூபிப்பதை உணர்ந்தான் ஆனந்தன்

அவள் நடைக்கு ஈடுகொடுத்தபடி குதித்துக்கொண்டு கூடவருவதுயார்? மகளாயிருக்குமோ? காயத்ரியின்மறு

பதிப்பாய் அந்தச் சிறுமி காயத்ரியின் கைவிரல்களைப் பற்றி வருவதை ரசித்தான்.

ஆனந்தனின் அருகில் வந்த காயத்ரி, " ஆனந்த்! கண்டிப்பாய் நினைவுவைத்து இங்கேவருவாய்னு எனக்குத் தெரியும் .
.ரொம்பமகிழ்ச்சியா இருக்கு....ஒருநிமிஷம் இந்த பரவசத்தை அனுபவிச்சிட்டு உன்கூட பேசணும் ப்ளீஸ்வெயிட் "என்றவள் கண்ணை இறுகமூடிக்கொண்டாள்.ஒரேகணத்தில் மீண்டும் இமைதிறந்தவள்," ஆனந்த்!" என்றாள் அன்பு பொங்கும் குரலில்.

"எப்படிஇருக்கே காயத்ரின்னு உன்னைகேட்க அவசியமேஇல்லாமல் நீ அப்படியே இருப்பதை முகம் காட்டுதும்மா,ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கும்.இதுயார் உன் பெண்ணா?" ஆனந்தன் அந்தக் குழந்தையை ஆர்வமாய் பார்த்தபடி கேட்டான்.

"ஆமாம். பெயர் நிவேதிதா."என்ற காயத்ரி மகளிடம்," அங்கிளுக்கு வணக்கம் சொல்லும்மா" என்றதும் அழகாய் கைகுவித்து,"வணக்கம் "என்றது குழந்தை.காயத்ரி தொடர்ந்தாள்.

" நானும் நீயும் காலேஜ்நாளில் நமது லட்சியங்களில் ஒன்றாய் நமக்கு ஆண்குழந்தைபிறந்தால் விவேகானந்தன் பெண் பிறந்தால் பாரதிக்கே ஞான குருவாய் விளங்கிய சகோதரி நிவேதிதாவின் பெயரைத்தான் வைக்கணும் என்று பேசிக்கொண்டபடி என் மகளுக்கு அந்தபெயரைத்தான் வச்சிருக்கேன்..அவள் அப்பாவிற்கும் பிடித்த பெயர் இது. ஆமாம் நீ பெங்களூரில் தான் வேலைபார்க்கிறியா ஆனந்த்? கல்யாணமாகி குழந்தை உண்டா?"

"அப்பா இறந்துபோனதும் துபாயில் பார்த்த நல்ல வேலையை விட்டு பெங்களூர் திரும்பிவந்தவன் தான் இங்கேயேதான்இருக்கிறேன்..நாலுவருஷம் முன்னாடி கல்யாணம் ஆகி ஒருபையன் இருக்கான் மூணு வயசில.. இடையில் உன்கூட தொடர்பே இல்லாமல் செய்த என் முட்டாள்தனத்துக்கு என்னை மன்னிக்கணும் .."ஆனந்தன் குற்ற உணர்வில் இப்படித்தயங்கிப்பேசவும் குறுக்கிட்டாள் காயத்ரி.

"ஷ் ... அதெல்லாம் நான் கேட்டேனா ஆனந்த?.அப்படி எதிர்பார்த்து பழகும் நட்பு இல்லையே நம்முடையது? மனசு இருக்கே அது மாடு மாதிரி நினைவுகளை அசை போட்டுட்டேதான் இருக்கும் எப்போதும்..இன்னிக்கு உன்னைப் பார்க்கத் தானே பம்பாயிலிருந்து பறந்துவந்திருக்கிறேன்?ஒரு வாரமாய் மனசுக்குள் ஒரேடியாய் மகிழ்ச்சி அலைதான்! காலை எழுந்து வேகமா புதுவருஷத்தை வரவேற்று கொண்டாடி முடிச்சி
மதியம் ஃப்ளைட் ஏறிட்டேன்!நேரா ஹோட்டல் போயி நானும் என் பொண்ணும் ரூம்ல ஒருமணீ ரெஸ்ட் எடுத்து ,உடனே ஆட்டோ பிடிச்சி இங்க வந்துட்டோம்! ம்ம்..ஆன்ந்த!சொல்லு எப்படி இருக்கிறது உன் வாழ்க்கை?"

இருவரும் கல்பெஞ்சில் அருகருகே அமர்ந்துகொண்டார்கள். நிவேதிதா மரம் ஒன்றினைச் சுற்றியபடி விளையாடப் போய்விட்டாள்.
ஜோடிகளாய் பலர் விரல் பிணைத்து நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். காற்றில் இன்னமும் குளிர் சேர, காயத்ரி ஸ்கார்பினை எடுத்து தலைக்கு சுற்றிக்கொண்டாள். அடர்த்தியான அந்த நீலநிறஸ்கார்ப் அவள் முகத்தினை இன்னும் வசீகரமாக்கியதை ஆனந்தன் கவனித்தான்.


பிறகு மென்மையான குரலில், காயத்ரியின் கேள்விக்கு பதில் சொன்னான்." என் வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்து அமைத்துக்கொள்ளல காயத்ரி,தானாய் வந்ததை ஏத்திட்டு வாழ்ந்துட்டிருக்கேன் .... என்மகனுக்கும் பெயர் விவேகானந்தன் தான். மூணுவயசு."

"அப்படியா ? இப்போ மனைவி மகன் ஊரில் இல்லையா அதான் உள்ளுரில் இருந்தும் இங்கே அழைத்துவரலையா?"

"அ..அ...ஆமாம்" ஆத்ம சினேகிதியிடம் பொய் சொல்ல வேண்டிய வேதனையை மறைக்க முயற்சித்தபடி பதில் சொன்னான்.

"பரவாயில்லை அடுத்தமுறை பார்த்துடலாம்... அப்போ நிவேதிதா அப்பாவும் வந்துவிடுவார். இப்போதான் அவர் கம்பெனி விஷயமா ஜெர்மனி போயிட்டார்"என்ற காயத்ரி தூரத்தில் விளயாடிக்கொண்டிருந்த மகளை அழைத்து ஆனந்தனுக்கு பாரதியார் பாடலில் ஒன்றையும் குறளில் ஒன்றும் சொல்லசொன்னாள். உடனேயே தெளிவாய் அழகாய்,"மனதில் உறுதி வேண்டும்" எனப்பாட அரம்பித்தாள் நிவேதிதா.தமிழ் கொஞ்சியது.
குறள் சொல்லி முடித்ததும்,
"அம்மா..இன்னும் கொஞ்சம் விளையாடிட்டு வரட்டுமா?" அனுமதிகேட்டு தாயின் தலையசைப்பில் மகிழ்ந்து ஓடிச்சென்றாள்.

காயத்ரி தனது கணவர் மற்றும் மணவாழ்க்கை பற்றி பெருமையாய் கூறிவிட்டு பிறகு உணர்ச்சிவசப்பட்டவளாய் பேச ஆரம்பித்தாள்.

'ஆனந்த் !நாம் படிக்கிற நாளில் பேசிக் கொள்வோமே, நமக்குக் குழந்தை பிறந்தால் இலக்கியமும் ஆன்மீகமும் படிப்போடு கத்துக்
கொடுக்கணும்னு.. அதெல்லாம் நாம் உரியவயதில் கத்துக்கிட்டதாலதான் நமக்கு பாரதி சொன்னமாதிரி பகைவனுக்கும் அருளுகிற
நன்னெஞ்சு வந்தது.நமது வாழ்க்கைப் பயணத்துல வால்ட்விட்மனும் பாரதி,கம்பனும் விவேகாநந்தரும் வள்ளுவரும் உடன் வந்தாங்க ...இன்னமும் வந்துட்டும் இருக்காங்க. இனியும் இளையதலைமுறையை, வளமான பாதைல கொண்டுபோய்ச் சேர்க்கிற பொறுப்பு, நம்மாதிரி இளம் பெற்றோர்களுக்கு அதிகமிருக்கணும். இன்றையதேதியில் இளைஞர்கள்கிட்ட வன்முறையும் வெறியும் தீவிரவாதப் போக்கும் இருக்கக் காரணம் அவங்களுக்கு இலக்கிய ஆன்மீக வழிகாட்டிகள் வாழ்க்கையில் இல்லாததால்தான். என்னால முடிஞ்சது, இளையதலைமுறைக்கு இதையெல்லாம் கொண்டுசெல்வதுதான்.."

அவள் அருவியாய் கொட்டுகிறாள், இவன் அதில் நனைகிறான். மனம் வறண்ட பாலையில் நீர் ஊற்றியதுபோல பேசப்பேச அத்தனையையும் உள்வாங்கிக் கொள்கிறது.

"சரி...புறப்படலாமா ஆனந்த்? ராத்திரி ஃப்ளைட்ல நான் பம்பாய்க்குத் திரும்பணும்.. அடுத்தநமது தீர்மானிக்கப்பட்ட சந்திப்பு,பத்து வருடம் கழித்து இதே லால்பாக்கில் இதே நாள் இதே நேரம்! அப்போது என் பெண்பதினேழுவயது குமரியாய் வளர்ந்து உன்னிடம் இலக்கியமும் தெளிந்த நிலையில் ஆன்மீகமும் பேசுவாள். உன் பையனும்தான் அப்படிப்பேசபோகிறான், உன் வளர்ப்பில் இன்னமும் நம்பிக்கையுடனேயே! என் விசிட்டிங்க் கார்ட்
கொடுக்கிறேன், அவசியம் பம்பாய்வந்தால் வீட்டுக்குவா..நிவேதிதா! அங்கிளுக்கு சொல்லும்மா...?'

"அங்கிள்.. உங்களைப் பார்த்துப் பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி..மறுபடி பார்க்கும்வரை நினைவில் வச்சிருப்பேன்...வீட்டுக்கு வாங்க அங்கிள்!"

பிறருக்கு மதிப்பு கொடுத்து பிறர் நலத்தைப் பரிவோடு காணும்போது தன்னல நிறைவு உண்டாவதை காயத்ரி பேசும்போதெல்லாம்
நிரூபிப்பது வழக்கம். இந்த சந்திப்பிலும் அவள் அப்படி நடந்து கொண்டதோடு தனது வாரிசையும் அப்படிக் கொண்டுவந்ததைப் பார்த்த ஆனந்தனுக்குப் பெருமையாய் இருந்தது.

வீடு வந்து சேர்ந்தவனை வாசலிலேயே எதிர்கொண்டு கேள்விக்கணை தொடுக்க ஆரம்பித்தாள் மாதவி.

"யாரைப்பார்த்துட்டு வரீங்க? அவள் என்ன அழகியா? உங்க அந்தரங்கக்காதலியா? சொல்லுங்க..மௌனமா இருந்தே என்னை சித்திரவதை செய்யாதீங்க... சொல்லுங்க சொல்லுங்க.." அவனைப் பிடித்து உலுக்கினாள்.

கத்தினாள்,தலையில் அடித்துக்கொண்டாள்.கையில் கிடைத்த பொருட்களை வீசி எறியத்தொடங்கினாள்

' நட்புக்கு அடிப்படையாக இருப்பது ஒத்த தொழிலோ வயதோ அந்தஸ்தோ அல்ல. வாழ்க்கை நிலையில் பல்வேறு அந்தஸ்தில் இருப்பவர்களுக்கிடையே நட்பும் பாசமும் ஏற்படும்; இதில்பால்பேதங்கள் கிடையாது. கொடுப்பதும் பெறுவதுமான காமம் போன்று,
ஆன்மாவின் அந்தரங்க ஆழத்தில் இருந்து உயிர்கள் சங்கமிப்பதே உயர்ந்தநட்பின் அடிப்படை .நான் பெற்றுள்ள நட்பெனும் பேறு மிகப் பெரியது அது என்னுள் ரகசியமாகவே இருக்கட்டும்.அதை மாதவியிடம் சொல்லி சிறுமையடையத் தேவை இல்லை.'

ஆனந்தன் மனதிற்குள் நினைத்தபடி மௌனமாய் மாடிப்படிகளில் ஏறிச்சென்றான்.
மாதவி கீழிருந்தபடி கூச்சல்போட்டுக் கொண்டே இருந்தாள்.
*************************************************************************************

அதிகாரம்79.பொருட்பால்

குறள்.786.

முகம்நக நட்பது நட்பன்று;நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.
(முகம் மலர்ந்து பழகுவது மட்டுமே நட்பாகிவிடாது மனமும் மலரும்படி உள்ளன்பு கொண்டு உண்மையாகப் பழகுவதே உயர்ந்த நட்பு)

Apr 21, 2007

மக்கட் பேறு-குறள்-69

கொழிச்சிக்காட்டூர் முழுக்க ஒரே பேச்சு. அது காளியம்மாள் மகன் செந்தில்குமார் ஆஸ்கார் விருது வாங்கப் போகிறார் என்பதே. காடு, மேடு, கழனி, ஆடு மேய்க்கிறவங்கள்ல ஆரம்பிச்சு இதைப்பத்தியே பேச்சு எங்கே பார்த்தாலும். அந்த ஊர் சங்ககிரியிலிருந்து 16 மைல் தள்ளி இருந்தது. டவுன் பஸ் மட்டுமே நிற்கும், அதுவும் மேட்டுக்கடையில்தான். அங்கே இருந்து 3 கிலோமீட்டர் உள்ளே இருக்கு கொழிஞ்சிக்காட்டூர்.

அந்த கிராமத்துல பொறந்து காலேஜ் வரைக்கும் படிச்சவர் செந்தில். படிச்ச BA-Economicsக்கு வேலை கிடைக்காததால ஊரிலே இருக்கிற 3 ஏக்கர் மேக்காடை 2 வருஷமா உழுது அதுவும் வயித்துக்கு, மனசுக்கு பத்தாதால சென்னையில சினிமா டைரக்டர் ஆவனும்னு ஆவலோட பஸ் ஏறின செந்திலபத்தி இப்போதான் ஊர் மக்களுக்கு தெரிய வந்து இருக்கு. அவர் நண்பன் சின்னகண்ணுக்கும், அவுங்க அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியும் இந்த 3 வருஷத்துல என்ன நடந்துச்சுன்னு. போன வருஷம் மாரியம்மன் பொங்கலுக்கு கூட வரலை.

மணி ராத்திர் 7, ஊர்க்கவுண்டர் வீட்டுக்கு முன்னாடி ஊர்சனம் மொத்தமும் காத்து இருந்தது. அவரு வீட்டுல மட்டுந்தான் குடை வெச்சு ஸ்டார் டிவி வரும். பஞ்சாயத்து டி.வில இன்னும் பொதிகைதானே. ஊர்கவுண்டர் பையன் சின்னகண்ணு, அவர்தான் செந்தில் கூட நெருக்கம். அதுவுமில்லாம அவர்கிட்டேதான் செந்திலு அடிக்கடி பேசிக்குவாராம்.

"செந்திலு, ஒரு சினிமா எடுத்து இருக்காப்ல. அதுக்கு பேரு Documentary. சின்னப்படம்னு சொல்லலாம். அந்தப்போட்டிக்கு உலகத்துல இருந்து மொத்தம் 358 படம் வந்துருக்கு அதுல நல்லதா 5 படத்தை கடேசி ரவுண்ட் வரைக்கு வந்து இருக்கு. அதுல நம்ம செந்திலுதும் ஒன்னு. காளியம்மா இது வரைக்கும் பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்கே விடிவு காலம் வந்துரும். இந்தப்போட்டியில செந்திலு ஜெயிச்சுட்டா லட்சக்கணக்குல பணம் வந்துரும். அப்புறமா காளியம்மா காட்டுலயும் வேல பார்க்க வேணாம், கால் மேல கால் போட்டுக்கிட்டு இருக்கலாம்" அப்படின்னு முடிச்சாரு சின்னகண்ணு.

புரிஞ்சும் புரியாத மாதிரியும் பல அம்மாக்கள் வாயைப்பிளந்துகிட்டு புரியாத அந்த ஸ்டார் டி.வியப் பார்த்துக்கிட்டு இருக்க. குட்டி செவுத்து மேல உட்காந்துகிட்டு இருந்த இளவட்டங்க "ஏன் மாப்ள. செந்திலு அவ்ளொ பெரிய ஆள் ஆயிட்டானாடா? கிஸ் சீனு வெச்சு இருப்பானோ அவன் படத்துல"ன்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுது. காளியம்மாவுக்கு அன்னிக்கு சேர் போட்டு முன்னாடி உட்கார வெச்சு இருந்தாங்க. அந்தப் பெருமை போதுமே. இந்த 2 வருஷமா செந்தில் அனுப்புற 2000 ரூவா பணத்தையே காளியம்மாவால செலவு செய்ய முடியல. ஊர்கவுண்டர் வீட்டுக்கு செந்திலு வாரவாரம் தவறாம போன் பண்ணி பேசுனதனால அவர் ஊருக்கு வராததுகூட பெரிசா தெரியல.

சேர்ல இருந்து திரும்பி உட்காந்து இருந்த மக்கள பார்த்துச்சு காளியம்மா. ஆம்பளைங்க எல்லாம் கயித்துக்கட்டில்ல உட்காந்து இருக்க, பொம்பளைங்க கீழே உட்காந்து காளியம்மாவை பொறாமையா பார்த்துட்டு இருந்தாங்க. "பாழாய் போன கண் ஆப்ரேஷன் பண்ணி 10 நாள் கூட ஆவல, பெரிசா கருப்புல கண்ணாடி வேற போட சொல்லி, கழட்டவும் கூடாதுன்னுட்டாங்க. டிவி வேற மங்களாய் தெரியுது" பையனை நல்லா பார்க்கனும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு இருந்தா காளியம்மா.
யாரோ யாரோ வராங்க குத்துவிளக்காட்டம் ஒன்ன வாங்கிட்டு போறாங்க. ஏதேதோ பேசுறாங்க, மக்களுக்கு ஒன்னும் புரியல. சின்னகண்ணு திடீர்னு "செந்திலு போட்டி வந்துருச்சு, கம்னு இருங்க"ன்னு சொல்ல எல்லார் கண்ணும் டிவி மேலையே இருக்க.

The Award Goes to the Documentary Film "one and only by Senthil kumar" அப்படின்னு சொல்ல கேமரா எல்லாம் செந்திலை நோக்கி திரும்பியது. கோட் சூட் போட்ட செந்திலு சந்தோசமா எழுதிருச்சு மேடையப் பார்த்து நடக்க, ஊரு சனம் அத்தனை வாய் பிளந்து பார்த்துச்சு. ஓட்டைபனியனும், கிழிஞ்ச லுங்கியுமா பார்த்தவனை இப்படி பார்க்க காளியம்மாவுக்கே ஒரு நிமிஷம் "எம்மவனா" அப்படின்னு ஆச்சர்யப்பட்டுருச்சு. "செந்தில் படத்துகு விருது கிடைச்சு"ன்னு சின்ன கண்ணு சொல்ல "செந்திலு ஏதோ இங்கிலீசு பேசி அந்த குத்துவிளக்குக்கு முத்தம் குடுத்துட்டு கீழே இறங்கி போய்ட்டாரு. "ஆத்தா, உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சின்னகண்ணு சொல்ல,
"காளியாத்தா, செந்தில பார்த்தியா, தொரை மாதிரியே இருக்கான். சுத்தி போடுக்கா" "ஆத்தா செந்திலா இது. வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்" "பங்காளி, எப்படிடா இப்படி ஆனான் இவன், எல்லாம் பணம் பண்ற வேலை" ஊர் மக்கள் அவுங்க அவுங்க மாதிரி பேசிட்டு எழுந்திருச்சு காளியம்மா கிட்டே வர . கருப்பு கண்ணாடி வழியே இரு கண்களிலும் கண்ணீர் வழிய அசையாம டிவிவே பார்த்துட்டு இருந்தா காளியம்மா. "காளியம்மா" தொட்டு எழுப்ப "உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சொன்ன அடுத்த வினாடியே சந்தோசத்துல உசுரு போயிருந்தது காளியாம்மாவுக்கு.

குறள்:

'ஈன்ற பொழிதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"


அதிகாரம்; மக்கட்பேறு-அறத்துப்பால்-குறள் 69

"தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியவிடப் பெரிதும் மகிழ்வாள்."

Mar 4, 2007

மக்கட் பேறு:6(66):குறள்

ஒரு இல்ல திரையரங்கம் (DTS-Home Theatre) வாங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளையக்கனவு. கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட மன உந்துதல் அது. வேலைக்கு சென்ற பொழுதும் பொருளாதாரப் பற்றாக்குறையால் என் கனவு, கனவாகவே இருந்து வந்தது. திருமணம் ஆனபின் மனையாள் வயிற்றிலேயே குழந்தை கர்னாடக இசை கேட்கவைக்க வேண்டும் என்ற நினைப்பும் நிறைவேறவே இல்லை.

ஆயிற்று எனக்கு ஒரு ஆண் வாரிசு பிறந்தும் அவன் தவழ ஆரம்பித்தும் ஒரு மாதம் ஆயிற்று. இன்று அனைத்தும் கூடி வர இல்ல திரையரங்கம் வாங்கிவிட்டு, கடையில் பணம் கட்ட வரிசையில் நிற்கிறேன். "மாப்ளே, மோனோ, ஸ்டிரியோ எல்லாம் சத்தம் தாண்டா போடும், இல்ல திரையரங்கம் மட்டும் தாண்டா இசையை சொல்லும்" 10வருடத்துக்கு முன் கல்லூரி நண்பன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

"சார், நீங்க வாங்கியிருக்கிற Home Theatre உலகத்துல சிறந்த மாடல்ல ஒன்னு" வீட்டில் Home Theatreஐ அந்தந்த இடத்தில பொருத்தி சரிபார்த்துவிட்டு போகும்போது பொறியாளர் சொல்லிவிட்டு சென்றார்.

மனதில் இறுமாப்பும், பெருமையுடன் இளையராஜாவின் திருவாசக வட்டை உள் செலுத்தி கேட்க ஆரம்பித்தேன். என் தந்தையும் என் கூட அமர்ந்து அமைதியானார். அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்து வட்டையும் கேட்க ஆரம்பித்தோம். கல்லூரி நண்பன் சொன்ன மாதிரியே இதுதான் இசை, மத்ததெல்லாம் சத்தம்தான். அவன் வார்த்தைகள் ஒரு ஞானியின் தத்துவமாய் இப்போது தோன்றியது.

"என்னங்க" சத்தமாய் மனையாள் அழைக்க ஓடினேன்.

"இங்கே பாருங்க பையன் என்ன சொல்றான்னு"

ஆச்சர்யமாய் என் வாரிசை நோக்கினேன் "ம்ம்மா, ம்ம்மா" பேச ஆரம்பித்தது என் பிஞ்சு.

மனசுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள், பட்டாம்பூச்சிகள்,.. என்னவென்று சொல்ல வார்த்தைகளே இல்லை. வாங்கிய Home Theatre சத்தமாய் ஒரு கர்னாடக இசையை ஒலிக்க
"அப்பா அந்த சத்தத்தை குறைச்சுட்டு இங்கே வாங்க உங்க பேரன் என்ன சொல்றான்னு கேளுங்க"

அந்த சத்தத்தை அணைத்துவிட்டு என் தந்தைக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்க என் அறைக்கு வந்தார்.

குறள்:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழைலைச்சொல் கேளாதவர்

அதிகாரம்:மக்கட் பேறு(குறள் 66)

தம் மக்களின் மழலைச்சொல்லக்கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்

Mar 1, 2007

;"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! [11]"படைச் செருக்கு" [771]

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! [11]
"படைச் செருக்கு" [771]

இந்த லப்-டப் எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தேன்... இப்பவெல்லாம் மன்னாரைப் போய் பார்க்கவே நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது!

இன்றைக்கு எப்படியாவது பார்த்துடணும்னு முடிவு பண்னி, அவனைத் தேடி 23B பஸ் பிடித்து லஸ் கார்னரில் இறங்கி, சூடான வேர்க்கடலை ஒரு 2 ரூபாய்க்கு வாங்கி, கொரித்துக் கொண்டே வழக்கமான டீக்கடை நோக்கி நடந்தேன்.

திடீரென ஒரு கரம் என்னை இழுத்து ப்ளாட்ஃபாரத்தில் தள்ளியது.

அதே நேரம், "ஸர்"ரென்று ஒரு பஸ் என்னைத் தாண்டிச் சென்றது!

"இன்னாப்பா! வூட்ல சொல்லிக்கினு வண்ட்டியா? என் பஸ்தானா ஒனக்குக் கெடச்சது அதுக்கு.... சாவுக்கிராக்கி" என்ற மாமூல் திட்டுடன் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

சற்று சுதாரித்துக் கொண்டு யார் நம்மைக் காப்பாற்றியது எனப் பார்த்தால்... சாக்ஷாத் மயிலை மன்னார்!

"ஒரு ஸெகண்டு வுட்ருந்தா இன்னா ஆயிருக்கும்! பாத்து வரக்கூடாது ஸங்கரு! ஸரி ஸரி.. வா! கெதி கலங்கிப் போயிருக்கே! நாயர் கடைல டீயும், வடையும் துன்னியானா அல்லாம் ஸரியாப் பூடும்" என ஆதரவாய்ச் சொல்லிக் கொண்டே என்னைக் கூட்டிப் போனான், மன்னார்.

'ஆமா! அப்டி இன்னா தல போற விசயம் யோஸிச்சிகினு இருந்தே! சொல்லு!' என்றான்.

'ஒண்ணுமில்லேப்பா! உன்னைப் பர்த்து நாளாகி விட்டதே. இன்று எப்படியும் பார்த்து விடணும்னு வந்தேன். கொஞ்சம் அஸால்ட்டா இருந்துட்டேன். ரொம்ப நன்றிப்பா!' என்று மஸால் வடையை கடித்துக் கொண்டே ஸொன்னேன்!

'அதான் நாம ஒனக்கு ஒரு ஸோல்ஜர் மாரி இருக்கோம்ல! எங்ஙன போனாலும் வுட்ட்ருவோமா? சமயத்துல ஸோல்ஜர்! ஆனா நெஸமாலும் ராஸா!' என்று சற்று மிதர்ப்பாக சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்.

இப்படி ஒரு ஆளு எனக்கு நண்பனாய் இருப்பதற்கு, இல்லை இல்லை ராஜாவாய் இருப்பதற்கு, இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே, 'இதே மேட்டர்ல ஒரு குறள் சொல்லி பொருளும் சொல்லேன்' என்றேன் நான்.

'அவ்ளோதானே! என்னிய மாரி ஒர்த்தன் ஒனக்கு இருக்கான்றதை நீ எப்படி போயி மத்தவங்ககிட்ட சொல்லுவேன்னு ஒரு குறள்..... வேணாம்... கதை ஒண்ணு சொல்றேன், எளுதிக்கோ!" என்றான்.


இனி வருவது, அவன் சொல்ல, நான் எழுதி உங்கள் முன் வைப்பது!

"அதியமான், அதியமான்னு ஒரு ராஸா இருந்தானே, தெர்யுமா? அதாம்ப்பா! நம்ம அவ்வைப்பாட்டிக்கு கூட நெல்லிக்கா கொடுத்தன்னு படிச்சோமே நம்ம இஸ்கூல்ல! அவந்தான்!

அவனும், இந்த அவ்வையாரும் ரொம்பவே தோஸ்துங்க. நீயும், நானும் மாரின்னு வெச்சுக்கயேன்!

எதுனாச்சும் ஒண்ணுன்னா, இவன் அந்தம்மாவுக்கு ஒதவி பண்றதும், அவனுக்கு எதுனாச்சும் புத்தி சொல்லணும்னா இந்தம்மாவைக் கேக்கறதும், அவங்க அத்தினி வேலையையும் போட்டுட்டு வந்து இவனுக்கு அட்வைஸ் கொடுக்கறதும் .... அப்படியே ரொம்ம்ம்ம்ப ஃப்ரென்ட்ஷிப்பா இருந்தாங்க.

இந்தம்மா அவனோட வீரத்தைப் பத்தில்லாம் நெறையவே பாட்டெல்லாம் பாடியிருக்கு!

ஒருநாளைக்கு அடுத்த ஊர்ல இருக்கற, தொண்டமான்ங்ற ராஸா ஒர்த்தன்.. இன்னாமோ இவன்ட்ட கோவிச்சுகிட்டு, பலான பலான தேதிக்கு நான் ஒன் நாட்டு மேல படையெடுக்கப் போறேன். ஒன்னால ஆனத செஞ்சிக்கோன்னு ஒரு ஓலை வுட்டான்.

அதியமானும், வலுச்சண்டைக்கு போறதில்லை; வந்த சண்டைய வுடறதில்லன்னு சண்டைக்கு ரெடியாயிட்டு இருக்கான்!

ஆனாக்காண்டி, நாட்டுல கொஞ்சம் நெலமை மோசமாயிருந்திச்சு அப்ப.

கொஞ்சம் பஞ்சம்,மக்கள்ல்லாம் பசி, பட்டினின்னு பஞ்சம் பொளைக்கப் போயிருக்காங்க!

இந்த சமயத்துல, சண்டை வேணாமேன்னு அவ்வையாரம்மா நெனைக்கறாங்க.

"தா! நீ கொஞ்சம் கம்முனு இரு. ஒன் வீரம்ல்லாம் எனக்குத் தெரியும் நல்லாவே! ஆனா, அது இப்ப வேணாம்! நா போயி இன்னா, ஏதுன்னு கண்டுகினு வரேன்'ன்னு சொல்லிட்டு தொண்டமான் ஊருக்கு வராங்க!

'ஆஹா! எப்பவும் நம்ம ஊருக்கு வராத கெளவி இப்ப நம்மைத் தேடி வந்திருக்காங்களே'ன்னு ராஸாவுக்கு ஒரே குஷியாப் பூடுச்சு!

தடபொடலா விருந்து வைக்கிறான்!

ராஸான்னா, அவனைப் பத்தி எதுனாச்சும் பாடணுமே!

'இன்னாடா பாடறது. நம்ம ஆளை வுட்டுக் கொடுக்காம நாம இவனைப் புகழ்ந்தும் பாடணுமே'ன்னு யோசிக்கறாங்க!

அப்ப, இந்த ராஸா இன்னா பண்றான்; ....அவனோட கத்தி கபடால்லாம் வெச்சிருக்கற எடத்துக்கு கூட்டிகினு போயி காமிக்கறான்.

'பாட்டியும் பாக்கட்டும், பார்த்தா, போயி, அதியமான்ட்ட சண்டை இல்லாம பணிஞ்சுறச் சொல்லிடும் இந்த அம்மா'ன்னு ஒரு கணக்கு போடறான்.

அங்க பாத்தா, வேலு, வில்லு, அம்பு, கத்தி, கேடயம், ஈட்டின்னு அளகா அடுக்கி வெச்சிருக்கு.

பாட்டிக்கு டமார்னு ஒரு ஐடியா கிடைக்குது!

பாடறாங்க!

"இங்கே பார்த்தா, மாலை சூட்டி, பொட்டு வெச்சு, எண்ணை தடவி, சும்மா பளபளான்னு பட்டை தீட்டி, புச்சா, இத்தினி அடுக்கி வெச்சிருக்கே ராஸாவே!

ஆனா, அங்கே அதியமான்ட்ட போயி பார்த்தியானா, சதா சண்டை போட்டு, சண்டை போட்டு, அவன் கத்தில்லாம் ஒடஞ்சி போயி, ஈட்டில்லாம் முறிஞ்சி போயி, காயலான் கடைல கீற மாரி குமிஞ்சு கெடக்கு.

இதுலேர்ந்து இன்னா தெரியுதுன்னா, சண்டைன்னா அவன் ஒரு கை பாக்காம வுட மாட்டான்.

ஆனா, ஒர்த்தன் கிட்ட ஒண்ணும் இல்லியா அவனோட சேர்ந்து போயி இவன், தன் சோத்தையும் வெச்சு அவனோட சாப்பிடுவான்!

ஆகக்கண்டி,....இன்னா....உன் வேலெல்லாம் பிரமாதமாத்தான் இருக்கு"

அப்பிடீன்னு ஒரு பாட்டு பாடறாங்க!

அவ்ளோதான்!

ராஸாவுக்கு புரிஞ்சிடுது!

இப்ப மாரி அடுத்தவன் அசந்திருக்கற நேரம் பர்த்து அடிக்கற எனம் இல்லை தமிளினம்!

ஒனக்கு சரிசமானமா இருக்கறவனோட மட்டுமே சண்டை போடணும்னு தெரிஞ்சு வெச்ச எனம் நம்முளுது!

'இவுஹ சொன்னதுலேர்ந்து, அங்கே நெலமை சரியில்லை; இப்ப நாம சண்டை போடக்கூடாது'ன்னு தொண்டமானும் அப்போதிக்கு நிப்பாட்டிர்றானாம் சண்டைய!

இதுல வள்ளுவரு எங்கே வராருன்னு கேக்கிறியா!?

அவரும் இந்த அம்மா காலத்துல இருந்தவர்தானே!

அவருக்கும் இது தெரிய வருது!

அவரு இதை ஒரு குறள்ல சொல்லணும்னு நெனைக்கறாரு!

"படைச்செருக்கு"ன்னு ஒரு அதிகாரம் எளுதறாரு!

அதுல மொதக் குறளா இதை வைக்கறாரு!

"என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலர் என்னைமுன்
நின்று கல்நின் றவர்." [771]

"ஏ எதிரிங்களே! என் தலைவன் முன்னே நின்னு, போர் செஞ்சு, மடிஞ்சு, அவனவனுக்குக் ஸமாதி கட்டிகிட்டவங்க பல பேரு!ஆனதுனால, என் தலைவன் முன்னே நிக்காதீங்க!"

அப்படீன்னு அம்ஸமா ஒரு குறளு, அதுவும் இது எங்கினாச்சும் நமக்கு மறந்து பூடுமோன்னு நெனச்சி, மொதக் குறளாவே எளுதியிருக்காரு!

அதே மாரி,.....நீயும் போயி, நம்ம பெருமைய ஊருக்கெல்லாம் ஸொல்லு!"


என்று சொல்லியபடி நகார்ந்தான் மயிலை மன்னார்!

'அது ஸரி மன்னார்! அவ்வையார் பாடினது என்னன்னு ஸொல்லவே இல்லியே' எனக் கேட்டேன்!

"அதுவா! பொறநானூறுல 95ஐப் பாருன்னு கண் சிமிட்டியவாறே ஸொல்லிவிட்டுப் போய்விட்டான் மயிலைமன்னார்!

அவசர அவசரமா வீட்டுக்கு வந்து, புஸ்தகத்தைப் புரட்டினேன்!
இதோ அந்தப் பாடல்!


"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே, அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றிலமாதோ -- என்றும்,
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே."

இதோ நண்பர்களே! உங்கள் பார்வைக்கும் இது!

நன்றி!


Feb 6, 2007

"நட்பாராய்தல்" குறள் 791

"இப்பல்லாம் முழு அதிகாரத்துக்கும் பொருள் வேணாமாம்; ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை சொல்லி விளக்கணுமாம்" என்றவாறு மயிலை மன்னாரை அணுகினேன்.

"ப்பூ! இம்புட்டுதானா? இதெல்லாம் நம்மளுக்கு ஜுஜுப்பீ! இப்ப நான் ஸொல்றதை எளுதிக்கோ! கதைக்காவ மண்டைய ஒடச்சு கற்பனை அல்லாம் பண்ண தேவையில்ல. அல்லாம் நம்ம புராணத்துலியே சொல்லியிருக்கு!மகாபாரதத்துல வர்ற கதை இது. எளுதிக்கோ" என்று தெனாவெட்டாகச் சொன்னான் மன்னார்!

இனி வருவது மன்னார் சொல்ல நான் பதிந்தது!


துர்வாசர்னு ஒரு முனிவரு இருந்தாரு.
அவரு ஒருநாளைக்கி திருதராஷ்ட்ரன் அரமணைக்கி வராரு.
அப்போ 'குந்தி'ன்னு ஒரு சின்ன பொண்ணு அவருக்கு பணிவிடை பண்ணினாங்க!
அத்தப் பாத்து முனிவருக்கு ரொம்பா சந்தோசமாயிருது.
'ஒனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரேன். அத்தை யூஸ் பண்ணினேன்னா அதுக்கான தேவதை வந்து. அத்தோட சக்தியை ஒனக்கு கொடுக்கும்'னு சொல்லிட்டு பூட்டாரு.


இந்தப் பொண்ணு சும்மா இருக்கக் கூடாதா?
வெளயாட்டுத்தனமா அந்த மந்திரத்த சொல்லிப் பாக்கலாம்னு செஞ்சுப்புடுது!

ஒடனே சூரிய பகவான் வந்து, 'ஏம் பொண்ணே என்னைக் கூப்பிட்டே! சரி, இந்தா; என் சக்தியை எடுத்துக்கோ'ன்னு சொல்லி ஓரு சூரிய அம்சக் கொளந்தையை, கவசக் குண்டலத்தோட, கொடுத்திட்டு மறைஞ்சிடறாரு.

இந்தப் பொண்ணுக்கா கையும் ஓடலை; காலும் ஓடலை!
இது தெரிஞ்சா ரொம்ப அவமானமாயிடுமேன்னு ஒரு பொட்டியில அத்த வெச்சு தன்னோட ஒரு மாலையையும் போட்டு ஆத்துல வுட்டுட்டாங்க.
அந்தக் கொளந்தைய ஒரு தேரோட்டி பாத்து எடுத்து தன் குளந்தை மாரி வளக்கறாரு.

இந்தக் கொளந்தை, நல்லா வளந்து, வில்லுவித்தைல ஒரு பெரிய ஆளா வராரு.

இத்த சரியாக் கவனிச்ச துரியோதனன், அதாம்ப்பா, ராசாவோட புள்ள, ஒரு சரியான சமயத்துல தன்னோட ராச்சியத்துல ஒரு ஊரைக் கொடுத்து அவனையும் ஒரு ராசாவாக்கி, 'நீதாண்டா என்னோட நண்பன்'னு சொல்லிடறான்!
அல்லாரும் நம்மை கொறைச்சலா பேசினப்போ, இவன் நண்பன்னு சொல்லிட்டானேன்னு, கொஞ்சம் கூட யோசிக்காம இவரும் அவன் கால்லுல வுளுந்திடறாரு.

அவ்ளோதான்!
இந்தாளு அதுக்காவ இன்னால்லாம் பண்றாரு தெரியுமா?
அவன் கெட்டவன்னு தெரிஞ்சாலும், அவனை வுட்டு பிரியாம கூடவே இருக்காரு.
ஒரு நேரத்துல தன்னோட தாயே வந்து 'நீதாண்டா என் புள்ள!'ன்னு கதற்ராங்க.
அப்பக் கூட அசையலியே!
'சர்த்தான் போம்மா! போயி, ஒன் புள்ள அர்ச்சுனனை ஒயுங்கா உசிரைக் காப்பாத்திக்கச் சொல்லு! ஏன்னா, என் நண்பனுக்காவ நான் அவன் தலைய வாங்கக் கூட தயங்க மாட்டேன்'னு கண்டிசனா சொல்லிடறாரு.
கடைசீல அந்த அர்ச்சுனன் கையிலியே உசிரையும் வுடறாரு.

இவரை நெனைச்சுதான் நம்ம ஐயன் இந்தக் குறளையே எளுதினாரோன்னு கூட எனக்கு டவுட்டு உண்டு!
அது இன்னான்னு கேக்குறியா!

இதான் அது1
'நட்பாராய்தல்' அப்பிடீங்கற அதிகாரத்துல மொதக் குறளா வெச்சிருக்காரு!
791ஆவது குறள் இது!
கேட்டுக்கோ!

"நட்பாராய்தல்"

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. [791]

இப்ப, நீ ஒருத்தராண்ட தோஸ்தாவறதுக்கு முன்னாடியே, இவன் யாரு, இந்த ஆளோட நட்பு வெச்சுக்கறது நமக்குத் தேவைதானான்னு யோசிச்சு முடிவு பண்ணணும். ஏன்னா, அப்படி ஆயிட்டேன்னு வெச்சுக்கோ; அதுக்கு அப்பால, நீ இன்னா பண்ணினாலும் ஒன்னால உடவே முடியாது.கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும். ஒன்னியக் காவு வாங்காம வுடாது.

'சரி, சரி, வா! நா ஒங்கிட்ட அப்பிடி ஒண்ணும் கேக்க மாட்டேன்! நம்ம நாயராண்டை ஒரு டீ, வடை சாப்ட்டுட்டு போயி ஒன் பதிவ எளுது' எனச் சிரித்தபடி தோளில் கை போட்டான் மயிலை மன்னார்!