கொழிச்சிக்காட்டூர் முழுக்க ஒரே பேச்சு. அது காளியம்மாள் மகன் செந்தில்குமார் ஆஸ்கார் விருது வாங்கப் போகிறார் என்பதே. காடு, மேடு, கழனி, ஆடு மேய்க்கிறவங்கள்ல ஆரம்பிச்சு இதைப்பத்தியே பேச்சு எங்கே பார்த்தாலும். அந்த ஊர் சங்ககிரியிலிருந்து 16 மைல் தள்ளி இருந்தது. டவுன் பஸ் மட்டுமே நிற்கும், அதுவும் மேட்டுக்கடையில்தான். அங்கே இருந்து 3 கிலோமீட்டர் உள்ளே இருக்கு கொழிஞ்சிக்காட்டூர்.
அந்த கிராமத்துல பொறந்து காலேஜ் வரைக்கும் படிச்சவர் செந்தில். படிச்ச BA-Economicsக்கு வேலை கிடைக்காததால ஊரிலே இருக்கிற 3 ஏக்கர் மேக்காடை 2 வருஷமா உழுது அதுவும் வயித்துக்கு, மனசுக்கு பத்தாதால சென்னையில சினிமா டைரக்டர் ஆவனும்னு ஆவலோட பஸ் ஏறின செந்திலபத்தி இப்போதான் ஊர் மக்களுக்கு தெரிய வந்து இருக்கு. அவர் நண்பன் சின்னகண்ணுக்கும், அவுங்க அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியும் இந்த 3 வருஷத்துல என்ன நடந்துச்சுன்னு. போன வருஷம் மாரியம்மன் பொங்கலுக்கு கூட வரலை.
மணி ராத்திர் 7, ஊர்க்கவுண்டர் வீட்டுக்கு முன்னாடி ஊர்சனம் மொத்தமும் காத்து இருந்தது. அவரு வீட்டுல மட்டுந்தான் குடை வெச்சு ஸ்டார் டிவி வரும். பஞ்சாயத்து டி.வில இன்னும் பொதிகைதானே. ஊர்கவுண்டர் பையன் சின்னகண்ணு, அவர்தான் செந்தில் கூட நெருக்கம். அதுவுமில்லாம அவர்கிட்டேதான் செந்திலு அடிக்கடி பேசிக்குவாராம்.
"செந்திலு, ஒரு சினிமா எடுத்து இருக்காப்ல. அதுக்கு பேரு Documentary. சின்னப்படம்னு சொல்லலாம். அந்தப்போட்டிக்கு உலகத்துல இருந்து மொத்தம் 358 படம் வந்துருக்கு அதுல நல்லதா 5 படத்தை கடேசி ரவுண்ட் வரைக்கு வந்து இருக்கு. அதுல நம்ம செந்திலுதும் ஒன்னு. காளியம்மா இது வரைக்கும் பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்கே விடிவு காலம் வந்துரும். இந்தப்போட்டியில செந்திலு ஜெயிச்சுட்டா லட்சக்கணக்குல பணம் வந்துரும். அப்புறமா காளியம்மா காட்டுலயும் வேல பார்க்க வேணாம், கால் மேல கால் போட்டுக்கிட்டு இருக்கலாம்" அப்படின்னு முடிச்சாரு சின்னகண்ணு.
புரிஞ்சும் புரியாத மாதிரியும் பல அம்மாக்கள் வாயைப்பிளந்துகிட்டு புரியாத அந்த ஸ்டார் டி.வியப் பார்த்துக்கிட்டு இருக்க. குட்டி செவுத்து மேல உட்காந்துகிட்டு இருந்த இளவட்டங்க "ஏன் மாப்ள. செந்திலு அவ்ளொ பெரிய ஆள் ஆயிட்டானாடா? கிஸ் சீனு வெச்சு இருப்பானோ அவன் படத்துல"ன்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுது. காளியம்மாவுக்கு அன்னிக்கு சேர் போட்டு முன்னாடி உட்கார வெச்சு இருந்தாங்க. அந்தப் பெருமை போதுமே. இந்த 2 வருஷமா செந்தில் அனுப்புற 2000 ரூவா பணத்தையே காளியம்மாவால செலவு செய்ய முடியல. ஊர்கவுண்டர் வீட்டுக்கு செந்திலு வாரவாரம் தவறாம போன் பண்ணி பேசுனதனால அவர் ஊருக்கு வராததுகூட பெரிசா தெரியல.
சேர்ல இருந்து திரும்பி உட்காந்து இருந்த மக்கள பார்த்துச்சு காளியம்மா. ஆம்பளைங்க எல்லாம் கயித்துக்கட்டில்ல உட்காந்து இருக்க, பொம்பளைங்க கீழே உட்காந்து காளியம்மாவை பொறாமையா பார்த்துட்டு இருந்தாங்க. "பாழாய் போன கண் ஆப்ரேஷன் பண்ணி 10 நாள் கூட ஆவல, பெரிசா கருப்புல கண்ணாடி வேற போட சொல்லி, கழட்டவும் கூடாதுன்னுட்டாங்க. டிவி வேற மங்களாய் தெரியுது" பையனை நல்லா பார்க்கனும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு இருந்தா காளியம்மா.
யாரோ யாரோ வராங்க குத்துவிளக்காட்டம் ஒன்ன வாங்கிட்டு போறாங்க. ஏதேதோ பேசுறாங்க, மக்களுக்கு ஒன்னும் புரியல. சின்னகண்ணு திடீர்னு "செந்திலு போட்டி வந்துருச்சு, கம்னு இருங்க"ன்னு சொல்ல எல்லார் கண்ணும் டிவி மேலையே இருக்க.
The Award Goes to the Documentary Film "one and only by Senthil kumar" அப்படின்னு சொல்ல கேமரா எல்லாம் செந்திலை நோக்கி திரும்பியது. கோட் சூட் போட்ட செந்திலு சந்தோசமா எழுதிருச்சு மேடையப் பார்த்து நடக்க, ஊரு சனம் அத்தனை வாய் பிளந்து பார்த்துச்சு. ஓட்டைபனியனும், கிழிஞ்ச லுங்கியுமா பார்த்தவனை இப்படி பார்க்க காளியம்மாவுக்கே ஒரு நிமிஷம் "எம்மவனா" அப்படின்னு ஆச்சர்யப்பட்டுருச்சு. "செந்தில் படத்துகு விருது கிடைச்சு"ன்னு சின்ன கண்ணு சொல்ல "செந்திலு ஏதோ இங்கிலீசு பேசி அந்த குத்துவிளக்குக்கு முத்தம் குடுத்துட்டு கீழே இறங்கி போய்ட்டாரு. "ஆத்தா, உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சின்னகண்ணு சொல்ல,
"காளியாத்தா, செந்தில பார்த்தியா, தொரை மாதிரியே இருக்கான். சுத்தி போடுக்கா" "ஆத்தா செந்திலா இது. வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்" "பங்காளி, எப்படிடா இப்படி ஆனான் இவன், எல்லாம் பணம் பண்ற வேலை" ஊர் மக்கள் அவுங்க அவுங்க மாதிரி பேசிட்டு எழுந்திருச்சு காளியம்மா கிட்டே வர . கருப்பு கண்ணாடி வழியே இரு கண்களிலும் கண்ணீர் வழிய அசையாம டிவிவே பார்த்துட்டு இருந்தா காளியம்மா. "காளியம்மா" தொட்டு எழுப்ப "உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சொன்ன அடுத்த வினாடியே சந்தோசத்துல உசுரு போயிருந்தது காளியாம்மாவுக்கு.
குறள்:
'ஈன்ற பொழிதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
அதிகாரம்; மக்கட்பேறு-அறத்துப்பால்-குறள் 69
"தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியவிடப் பெரிதும் மகிழ்வாள்."
Apr 21, 2007
மக்கட் பேறு-குறள்-69
செதுக்கியவர் ILA (a) இளா at Saturday, April 21, 2007 4 ஊக்கங்கள்
Labels: மக்கட் பேறு
Mar 4, 2007
மக்கட் பேறு:6(66):குறள்
ஒரு இல்ல திரையரங்கம் (DTS-Home Theatre) வாங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளையக்கனவு. கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட மன உந்துதல் அது. வேலைக்கு சென்ற பொழுதும் பொருளாதாரப் பற்றாக்குறையால் என் கனவு, கனவாகவே இருந்து வந்தது. திருமணம் ஆனபின் மனையாள் வயிற்றிலேயே குழந்தை கர்னாடக இசை கேட்கவைக்க வேண்டும் என்ற நினைப்பும் நிறைவேறவே இல்லை.
ஆயிற்று எனக்கு ஒரு ஆண் வாரிசு பிறந்தும் அவன் தவழ ஆரம்பித்தும் ஒரு மாதம் ஆயிற்று. இன்று அனைத்தும் கூடி வர இல்ல திரையரங்கம் வாங்கிவிட்டு, கடையில் பணம் கட்ட வரிசையில் நிற்கிறேன். "மாப்ளே, மோனோ, ஸ்டிரியோ எல்லாம் சத்தம் தாண்டா போடும், இல்ல திரையரங்கம் மட்டும் தாண்டா இசையை சொல்லும்" 10வருடத்துக்கு முன் கல்லூரி நண்பன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
"சார், நீங்க வாங்கியிருக்கிற Home Theatre உலகத்துல சிறந்த மாடல்ல ஒன்னு" வீட்டில் Home Theatreஐ அந்தந்த இடத்தில பொருத்தி சரிபார்த்துவிட்டு போகும்போது பொறியாளர் சொல்லிவிட்டு சென்றார்.
மனதில் இறுமாப்பும், பெருமையுடன் இளையராஜாவின் திருவாசக வட்டை உள் செலுத்தி கேட்க ஆரம்பித்தேன். என் தந்தையும் என் கூட அமர்ந்து அமைதியானார். அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்து வட்டையும் கேட்க ஆரம்பித்தோம். கல்லூரி நண்பன் சொன்ன மாதிரியே இதுதான் இசை, மத்ததெல்லாம் சத்தம்தான். அவன் வார்த்தைகள் ஒரு ஞானியின் தத்துவமாய் இப்போது தோன்றியது.
"என்னங்க" சத்தமாய் மனையாள் அழைக்க ஓடினேன்.
"இங்கே பாருங்க பையன் என்ன சொல்றான்னு"
ஆச்சர்யமாய் என் வாரிசை நோக்கினேன் "ம்ம்மா, ம்ம்மா" பேச ஆரம்பித்தது என் பிஞ்சு.
மனசுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள், பட்டாம்பூச்சிகள்,.. என்னவென்று சொல்ல வார்த்தைகளே இல்லை. வாங்கிய Home Theatre சத்தமாய் ஒரு கர்னாடக இசையை ஒலிக்க
"அப்பா அந்த சத்தத்தை குறைச்சுட்டு இங்கே வாங்க உங்க பேரன் என்ன சொல்றான்னு கேளுங்க"
அந்த சத்தத்தை அணைத்துவிட்டு என் தந்தைக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்க என் அறைக்கு வந்தார்.
குறள்:
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழைலைச்சொல் கேளாதவர்
அதிகாரம்:மக்கட் பேறு(குறள் 66)
தம் மக்களின் மழலைச்சொல்லக்கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்
செதுக்கியவர் ILA (a) இளா at Sunday, March 04, 2007 8 ஊக்கங்கள்
Labels: மக்கட் பேறு