Mar 4, 2007

மக்கட் பேறு:6(66):குறள்

ஒரு இல்ல திரையரங்கம் (DTS-Home Theatre) வாங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளையக்கனவு. கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட மன உந்துதல் அது. வேலைக்கு சென்ற பொழுதும் பொருளாதாரப் பற்றாக்குறையால் என் கனவு, கனவாகவே இருந்து வந்தது. திருமணம் ஆனபின் மனையாள் வயிற்றிலேயே குழந்தை கர்னாடக இசை கேட்கவைக்க வேண்டும் என்ற நினைப்பும் நிறைவேறவே இல்லை.

ஆயிற்று எனக்கு ஒரு ஆண் வாரிசு பிறந்தும் அவன் தவழ ஆரம்பித்தும் ஒரு மாதம் ஆயிற்று. இன்று அனைத்தும் கூடி வர இல்ல திரையரங்கம் வாங்கிவிட்டு, கடையில் பணம் கட்ட வரிசையில் நிற்கிறேன். "மாப்ளே, மோனோ, ஸ்டிரியோ எல்லாம் சத்தம் தாண்டா போடும், இல்ல திரையரங்கம் மட்டும் தாண்டா இசையை சொல்லும்" 10வருடத்துக்கு முன் கல்லூரி நண்பன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

"சார், நீங்க வாங்கியிருக்கிற Home Theatre உலகத்துல சிறந்த மாடல்ல ஒன்னு" வீட்டில் Home Theatreஐ அந்தந்த இடத்தில பொருத்தி சரிபார்த்துவிட்டு போகும்போது பொறியாளர் சொல்லிவிட்டு சென்றார்.

மனதில் இறுமாப்பும், பெருமையுடன் இளையராஜாவின் திருவாசக வட்டை உள் செலுத்தி கேட்க ஆரம்பித்தேன். என் தந்தையும் என் கூட அமர்ந்து அமைதியானார். அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்து வட்டையும் கேட்க ஆரம்பித்தோம். கல்லூரி நண்பன் சொன்ன மாதிரியே இதுதான் இசை, மத்ததெல்லாம் சத்தம்தான். அவன் வார்த்தைகள் ஒரு ஞானியின் தத்துவமாய் இப்போது தோன்றியது.

"என்னங்க" சத்தமாய் மனையாள் அழைக்க ஓடினேன்.

"இங்கே பாருங்க பையன் என்ன சொல்றான்னு"

ஆச்சர்யமாய் என் வாரிசை நோக்கினேன் "ம்ம்மா, ம்ம்மா" பேச ஆரம்பித்தது என் பிஞ்சு.

மனசுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள், பட்டாம்பூச்சிகள்,.. என்னவென்று சொல்ல வார்த்தைகளே இல்லை. வாங்கிய Home Theatre சத்தமாய் ஒரு கர்னாடக இசையை ஒலிக்க
"அப்பா அந்த சத்தத்தை குறைச்சுட்டு இங்கே வாங்க உங்க பேரன் என்ன சொல்றான்னு கேளுங்க"

அந்த சத்தத்தை அணைத்துவிட்டு என் தந்தைக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்க என் அறைக்கு வந்தார்.

குறள்:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழைலைச்சொல் கேளாதவர்

அதிகாரம்:மக்கட் பேறு(குறள் 66)

தம் மக்களின் மழலைச்சொல்லக்கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்

8 ஊக்கங்கள்:

said...

இளா,
நீங்க சொன்னது மிகச்சரி, குட்டி குட்டி பசங்க பேசத்தெரியாம பேசும் வார்த்தைகளின் அழகுக்கு ஈடு இணையே இல்ல இந்த உலகத்துல. DTS,dolphy எல்லாம் அதுக்கு முன்னாடி எம்மாத்திரம். புது குட்டியின் வரவுக்கு வாழ்த்துக்கள்.

said...

oops சரியாக படிக்கவில்லை, குட்டி பாப்பா பிறந்து ஒரு வருடம் ஆச்சி இல்ல. சமீபத்துல பிறந்த நாள் கூட கொண்டாடினிங்க, நான் தான் தப்பா புரிஞ்சிகிடேன். :(

said...

அதுதாங்க சங்கீதம். அதுதாங்க சந்தோஷம். அதுக்கு அப்புறம்தான் மத்த எல்லாம்.

வாழ்த்துக்கள்.

said...

இளா. :-) நல்ல உண்மைக் கதை. :-)

said...

சந்தோஷ்--> இது உண்மைக்கதை இல்லிங்க. ஒரு கற்பனைதான்.

said...

நன்றிங்க கொத்ஸ். அனுபவம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

said...

வாங்க குமரன், ஊக்கத்துக்கு நன்றிங்க.

said...

அருமை.