கோவை வந்து உலகத்தமிழ் இலக்கியக் கருத்தரங்கை துவக்கிவைத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது உரையில் ஔவையின் கீழ்கண்ட பாடலை மேற்கோளிட்டிருக்கிறார்.
அரிது அரிது மனிடராதல் அரிது
அதனினும் அரிது, கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்தாலும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும்தான் செய்த காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே!
மேலும் பாரதியின் அறிவியல், மெய்யியல் பாடல் வரிகள் கீழ்கண்டவாறு.
இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?
மேலும் அவர், "தமிழ் ஒரு பிரதேச மொழி மட்டுமில்லை; மனித சமுதாயத்தை சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம்" என்றிருக்கிறார்.
நன்றி: தினமலர்
Dec 19, 2006
அவ்வையும் அப்துலும்
செதுக்கியவர் சிறில் அலெக்ஸ் at Tuesday, December 19, 2006 4 ஊக்கங்கள்
Nov 28, 2006
கலைவாணரே உமைத்தானே
வாணரே கலைவாணரே
திரையுலகில்
உம்மையன்றி பலர் வீணரே
அவர்கள்
நகைச்சுவை என வருகையில்
வெறும் உடற் கோணரே
உன் கருத்து
உன் பட்டம்
உன் நடிப்பு
திருடித்தான் பலருக்குப் பிழைப்பு
அதனால் வியப்பதும் நிலைப்பதும்
உனது அன்றைய உழைப்பு
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வெற்றித் திருமகன் நீ
இது உனக்குத்தான் பொருத்தம்
வேறு யாருக்குச் சொன்னாலும்
ஏங்கேயோ உறுத்தும்
கிந்தனாரும் நல்லதம்பியும்
உலகத்திலே பயங்கரமான ஆயுதமும்
கண்ணே உன்னால் நானடையும் கவலையும்
மறவாத வகையறாவாக
பாட வேண்டும் தொகையறா
நவம்பர் 30ல் நீ பிறந்தாய்
ஐம்பதாம் ஆண்டில் மறைந்தாய்
ஆனாலும் தமிழர் மனிதில்
குறையாது நிறைந்தாய்
சமூகக் கருத்தும் நகைச்சுவையும்
ஒன்றாக்கி அதிலே உறைந்தாய்!
உனது புகழ்
இன்னும் வளரத் தேவையில்லை
செடிதானே மரமாக வேண்டும்
நீ மரம்!
நீட்டோலை வாசியா நின்ற நல்ல மரமல்ல
மலர்ந்து கனியும் காட்டகத்து மரம்!
அன்புடன்,
கோ.இராகவன்
செதுக்கியவர் G.Ragavan at Tuesday, November 28, 2006 17 ஊக்கங்கள்
Nov 9, 2006
இன்னும் இருக்கிறது ஆகாயம்-முடிவுகள்
இந்தத் தலைப்புக்கு வந்த கவிதைகள் பல. அதில் சிலர் பதிவுகள்(பிலாகர்) அல்லாதவர்கள். அவை கொடுத்த உற்சாகம் தான் எங்களுக்கு பெரிய ஊட்டமே. இருப்பினும் முடிவுகள் அறிவிக்க காலதாமதம் ஆனதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று கணினிமயமாக்கல் இல்லாததுதான்.
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பளித்த அனைவருக்கு நன்றி! நன்றி! நன்றி!
இப்படி ஒரு போட்டியை நடத்த எங்களுக்கு அறிவுரை வழங்கிய தடாலடியாருக்கும், ஊக்கமும் முடிவுகளில் உதவிய தேனி கண்ணனுக்கும் நன்றி!
முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலபாரதிக்கும்(ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு விமர்சனம் தந்தவருக்கு சங்கம் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது. நாளை அந்த விமர்சனங்களை ஒரு பதிவாகவே வெளியிடுகிறோம்), முத்துக்கள் மாதிரி ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு மதிப்பெண் அளித்து தரம் பிரித்து தந்த "நிலவு நண்பன்" ரசிகவ் ஞானி, அவர்களுக்கும் நன்றி! நன்றி!
தாமாகவே முன் வந்து எங்களுக்கு உதவிய முத்தமிழாருக்கும்(மஞ்சூர் ராஜா) ராசுக்குட்டிக்கும் எங்கள் நன்றிகள் பல.
வெற்றியாளர்களின் பெயர்களை வெளியிட சங்கம் தனி மடலை எதிர்பார்ர்க்கிறது- தனி மடல் முகவரி sirippu.sangam@gmail.com
இதோ முடிவுகள்
ஆறுதல்: கவிதை- 21
கவிதையைப் படிக்க சொடுக்கவும்
மூன்றாவது இடம்: கவிதை - 23
கவிதையைப் படிக்க சொடுக்கவும்
இரண்டாவது இடம்: கவிதை - 05
கவிதையைப் படிக்க சொடுக்கவும்
முதல் இடம்: கவிதை - 03
கவிதையைப் படிக்க சொடுக்கவும்
செதுக்கியவர் ILA (a) இளா at Thursday, November 09, 2006 7 ஊக்கங்கள்
Oct 27, 2006
புதுசு கண்ணா புதுசு!
காக்க வைத்தலும்,
காத்து இருப்பதும் சுகம்தான்.
புரிந்துகொள்பவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.
செதுக்கியவர் தமிழன் at Friday, October 27, 2006 3 ஊக்கங்கள்
Oct 17, 2006
இன்னும் இருக்கிறது ஆகாயம்-விமர்சனம்(30-34)
கவிதை-34 படிக்க
//இன்னும் இன்னும் வல்லது வாழ்வதற்காய்புத்தம் புது புனர்ஜென்மமேகஇன்னும் இருக்கிறது ஆகாயம்//
ஆரம்பத்தில் மழை, சூறாவளி,சுனாமி என்று நீரைச் சுற்றியே போகும் கவிதை, மெல்ல மற்ற இயற்கை, செயற்கை அபாயங்களையும் தொட்டு, வல்லவன் வாழ்வான் என்னும் சித்தாந்தத்தைச் சொல்ல முயல்கிறது. வழக்கமான சொற்களாலும் வசனங்கள் போன்ற நடையாலும் கவிதையின் பாணியில் நச் தன்மை குறைகிறது. வல்லது வாழ்வது நல்லதா, அல்லதா என்று எதை நிறுவ முயல்கிறார் கவிஞர் என்று புரியாமலும் போகிறது..
நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை 33 படிக்க
//முன்பும் இருந்தது ஆகாயம்இன்னும் இருக்கிறது ஆகாயம்இனியும் இருக்கும் ஆகாயம் //
மூன்றே வரிகளில் நல்ல கவிதை..
இனியும் இருக்கும் ஆகாயம் என்னும் நம்பிக்கை கவிதை.
நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை-32 படிக்க
//அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்" //
தாய்-மகள் உறவைப் பற்றிய அருமையான கவிதை..மகளே உலகமாய் வாழும் தாய்..தாயே உலகமாய் நினைக்கும் மகள்..இன்னும் இருக்கிறது வானம் என்கிறாள் தாய்..உலகத்தை மகளுக்கு உணர்த்தி..
நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை-31 படிக்க// மனம் கவர்ந்த மங்கையரைக் கண்ட மனிதனின் காதலை விவரிக்க வார்த்தையேது பலவாயிரம் உயிர் அணுக்களுடன் ஓட்டப் பந்தயத்தில் வென்றது அவளைக் காணவே //
காதலை இன்னுமொரு விதமாகச் சொல்கிறது இந்தக் கவிதை..முதல் காதல் அழியாதது..மனதை விட்டு விலகாதது..தோல்வியடைந்த முதல் காதலைப் பற்றிய நினைவுகள்..
நன்றி-விமர்சனம்-பாலபாரதி
கவிதை-30 படிக்க// இன்னும் இருக்கிறது ஆகாயம் அவர்தம் வீட்டுக் கூரையாக //
நச் கவிதை.. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டியான ஆகாயத்தை வீடிழந்து துன்பப் படும் நபர்களின் வாழ்க்கையுடன் ஒட்டிக் காட்டுகிறார் கவிஞர்
நன்றி-விமர்சனம்-பாலபாரதிஇதோ இந்தக் கவிதையில் பிச்சைக்காரி - வறியவர்கள் - நம்பிக்கை இழந்து பயணப்படுவோர்க்கெல்லாம் ஒரே ஆறுதலாக ஆகாயம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது என்று எழுதியிருக்கின்றார் கவிஞர். இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற வரியோடு முடித்திருக்கலாம் ஆனால் அவர்தம் வீட்டுக் கூரையாக என்று நீட்டியிருக்கவேண்டாம். கவிஞர் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளையும் கருத்துக்களையும் மெருகேற்றியிருக்கலாம்.
நன்றி-விமர்சனம்-நிலவு நண்பன்
செதுக்கியவர் தமிழன் at Tuesday, October 17, 2006 1 ஊக்கங்கள்
Sep 18, 2006
இன்னும் இருக்கிறது ஆகாயம்-அறிவிப்பு

முதலில் நன்றி உரை!
இப்படி ஒரு கவிதைப்போட்டியை நடத்துங்க என்று உறசாகப்படுத்திய GG அவர்களுக்கும்,
தலைப்புக்காக இரண்டு நாள் காத்துக்கொண்டிருக்கையில் அநாயசமாக ஒரு நொடியில் "இன்னும் இருக்கிறது ஆகாயம்" என்ற தலைப்பை கொடுத்த "தேனி" கண்ணனுக்கும்,
முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலபாரதிக்கும்(ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு விமர்சனம் தந்தவருக்கு சங்கம் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது. நாளை அந்த விமர்சனங்களை ஒரு பதிவாகவே வெளியிடுகிறோம்), முத்துக்கள் மாதிரி ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு மதிப்பெண் அளித்து தரம் பிரித்து தந்த "நிலவு நண்பன்" ரசிகவ் ஞானி, அவர்களுக்கும் நன்றி! நன்றி!
கடைசியாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கு நன்றி! சங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவ்வளவு நாள் தங்கள் வலைப்பதிவுகளில் கவிதைகளை வெளியிடாமல் நாகரிகம் காத்ததற்கு மேலும் ஒரு நன்றி!
பரிசுகளுடனும், தீர்ப்புடனும் உங்களை மீண்டும் சந்திக்கிறோம். அதுவரை உங்கள் கவிதைகளை பதிவுகளில் இட்டு இந்தப்போட்டியினை மேலும் சிறப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!
தாமாகவே முன் வந்து எங்களுக்கு உதவிய முத்தமிழாருக்கும்(மஞ்சூர் ராஜா) ராசுக்குட்டிக்கும் எங்கள் நன்றிகள் பல.
செதுக்கியவர் ILA (a) இளா at Monday, September 18, 2006 11 ஊக்கங்கள்
Sep 1, 2006
கவிதை போட்டி-1 : போட்டியில் பங்குபெறும் கவிதைகள்
நண்பர்களே! தமிழ்ச் சங்கம் அறிவித்த முதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்று, இம்முயற்சிக்குத் தங்களுடைய ஆதரவை அளித்து சிறப்பித்து உள்ளீர்கள். முதற்கன் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம்.
கவிதைப் போட்டிக்குத் தங்களுடைய படைப்புகளை அனுப்புவதற்கான கால வரையறை நேற்றிரவு(31.08.2006) 11.30 மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை மின்னஞ்சலில் வந்த 34 படைப்புகளும், தமிழ்ச் சங்கத்தில் தனிப் பதிவுகளாக வெளியிடப் பட்டிருக்கின்றன. இம்முப்பத்தி நான்கு கவிதைகளும் "கவிதைப் போட்டி-1"இல் பங்குபெறப் போகும் கவிதைகள் ஆகும். இக்கவிதைகளினின்று 20 கவிதைகளைத் தெரிவு செய்து இறுதி தேர்வுக்காக, கவிஞர் மு.மேத்தா அவர்களிடத்து அனுப்ப உள்ளோம். முதற்கட்ட கவிதை தேர்வை நடத்தும் பொறுப்பை, சங்கம் சாராத இரு வலைப்பதிவர்களிடத்து அளித்துள்ளோம். அவர்களைப் பற்றிய விவரங்கள் பின்வரும் நாட்களில் வெளியிடப்படும்.
போட்டியில் பங்குபெறும் கவிதைகளைப் போட்டியாளர்கள் தங்கள் சொந்த வலைப்பதிவுகளில் பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு மதிப்பளித்து வலைப்பதிவர்களும் போட்டியில் பங்குபெறும் தங்கள் கவிதைகளை இது வரை வலையேற்றவில்லை. போட்டியாளர்கள் கடைபிடித்த இந்த கட்டுப்பாட்டுக்கும் எங்களுடைய வணக்கங்கள். இருப்பினும் தன்னுடைய படைப்பைப் பற்றிய கருத்துகளை அடுத்தவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஒரு படைப்பாளிக்குத் கட்டாயம் இருக்கும் என்பதை நாங்களும் உணர்கிறோம். இதுவரை போட்டியாளர்கள், கடைபிடித்த கட்டுப்பாட்டை இன்னும் ஓரிரு நாட்களுக்குத் தொடர வேண்டுமாய் வேண்டுகிறோம். வரும் திங்கட்கிழமைக்குள் முதற்கட்டத் தேர்வுகள் முடிந்துவிடும் என நம்புகிறோம். அது முடிவடைந்ததும், சங்கத்தில் அது குறித்த ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பின்னர் போட்டியாளர்கள் "இன்னும் இருக்கிறது ஆகாயம்" என்னும் தலைப்பில் போட்டிக்கு அனுப்பிய கவிதைகளைத் தங்கள் சொந்த வலைப் பதிவுகளில் வலையேற்றிக் கொள்ளலாம்.
இதுவரை இப்போட்டிக்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
பி.கு: போட்டியில், பல்வேறு விதமான உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தும் அருமையான கவிதைகள் பங்கேற்றுள்ளன என இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறோம். அதே சமயம் போட்டியில் பங்குபெறாத மற்ற நண்பர்களும் இக்கவிதைகளைப் படித்து இன்புற வேண்டுகிறோம்.
செதுக்கியவர் கைப்புள்ள at Friday, September 01, 2006 4 ஊக்கங்கள்