Aug 15, 2006

சுதந்திரப் பயிர்

சுதந்திரப் பயிர் தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு கண்ணற்ற
சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? எந்தாய்!
நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து நொந்தார்க்கு
நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?

இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?
வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ?
எந்தை சுயா தீனமெமக் கில்லை
யென்றால் தீனரெது செய்வோமே?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?
இன்று புதிதாய் இரக்கின்றோ மோ?
முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே

- பெற்ற சுதந்திரத்தைப் பேணும் வலிமையைத் தருவாய் இறைவா!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

3 ஊக்கங்கள்:

said...

தமிழில் மட்டுமே பின்னுட்டம் இட வேண்டுமா??
ஆம் எனில் தலைப்பில் எழுதுங்கள்

நேற்று சில மணிநேரம் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை எனது ஆங்கில பின்னுட்டம் நீங்கள் வெளியிடவில்லை ஏன்??

said...

நேரமின்னமையாலும் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கு விடுமுறை என்பதாலும் எந்த பின்னூட்டமும் வெளியிட முடியவில்லை. இப்பொழுது அனைத்தையும் வெளியிட்டு விட்டோம். தாமதம் ஏற்படாமல் இனிமேல் பார்த்துக்கொள்கிறோம்.இனி எக்காரணத்தைக் கொண்டும் தமிழிலேயே பின்னூட்டமிடுமாரு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், நாங்களே அதை தமிழில் மொழிமாற்றி உங்கள் பெயரிலேயே வெளியிட்டு விடுகிறோம். எப்படியாவது உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யபட்டுவிடும்

said...

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுகந்திரம் அடைந்து விட்டோம் என்று.....

அனைவருக்கும் இனிய சுகந்திர தின நல்வாழ்த்துகள்